மிலன்:இத்தாலியின் மிலன் நகரில் உள்ள அபார்ட்மென்டில் ராஜேஷ்வர் சிங் (29) என்ற இந்தியர், தனது காதலி ககன்தீப் கவுருடன் (30) வசித்து வந்தார். ககன்தீப் கவுர், அங்குள்ள ஓட்டலில் பணிப்பெண்ணாகவும், ராஜேஷ்வர் பார் ஒன்றிலும் வேலை பார்த்து வந்தனர். இவர்களுடன் ஈரான் நாட்டை சேர்ந்த மகபாப் (29) என்ற பெண்ணும் தங்கி இருந்தார். இவர், அங்குள்ள ஆடை வடிவமைப்பு நிறுவனம் ஒன்றில் பயிற்சி பெற்று வந்தார்.
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு வெனீஸ் நகர் அருகே கால்வாயில் சூட்கேஸில் அடைக்கப்பட்ட நிலையில் மகபாப்பின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது. அவரை கொலை செய்து சூட்கேஸில் அடைத்தது தெரிய வந்தது. இதுதொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். வெனீஸ் நகர ரயில் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் ராஜேஷ்வர், ககன்தீப் சிங் இருவரும் சூட்கேசுடன் வந்து இறங்கியது பதிவாகி இருந்தது. இதையடுத்து, அவர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். முதலில் மறுத்த அவர்கள், பின்னர் பெண்ணை கொலை செய்து கால்வாயில் வீசியதை ஒப்புக் கொண்டனர்.
இதுதொடர்பாக போலீசார் கூறுகையில், ‘ராஜேஷ்வர், ககன்தீப் இருவரும் மகபாப்புக்கு இயற்கைக்கு மாறான செக்ஸ் தொல்லை கொடுத்துள்ளனர். இதனால் அவர் வீட்டை காலி செய்ய முடிவு செய்து, அட்வான்ஸ் பணத்தில் தனது பங்கை கேட்டுள்ளார். இதில் ஏற்பட்ட தகராறில் கழுத்தை இறுக்கி மகபாப்பை கொலை செய்துள்ளனர். பின்னர் சடலத்தை சூட்கேஸில் அடைத்து லெக்கோ நகர் அருகே உள்ள ஏரியில் வீசுவதற்காக ரயிலில் எடுத்துச் சென்றுள்ளனர். அங்கு ஆட்கள் நடமாட்டம் அதிகம் இருந்ததால் வெனீசுக்கு சென்று கால்வாயில் சடலத்தை வீசியுள்ளனர். தற்போது இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்‘ என்று தெரிவித்தனர்.