கையெழுத்து கேட்டு மனைவியை மிரட்டிய அதிமுக நிர்வாகி கைது
அண்ணாநகர்: ஒரு கோடி ரூபாய் கடன் வாங்குவதற்கு கடன் பத்திரத்தில் கையெழுத்து போட வலியுறுத்தி மனைவியை மிரட்டிய அதிமுக மருத்துவர் அணி இணை செயலாளர் கைது செய்யப்பட்டார்.சென்னை பாடி யாதவா தெருவில் பல் மருத்துவமனை நடத்துபவர் டாக்டர் ராமசாமி(38). இவர், திருவள்ளூர் வடக்குமாவட்ட அதிமுக மருத்துவர் அணி இணை செயலாளராகவும் இருக்கிறார். இவரது மனைவி டாக்டர் சந்திரகலா (35). இவர் சென்னை எழும்பூரில் உள்ள குழந்தை நல மருத்துவமனையில் பணியாற்றுகின்றார். இவர்களுக்கு கடந்த 10 வருடங்களுக்கு முன் திருமணம் நடந்தது.
இந்த நிலையில், திருமங்கலம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் நேற்று சந்திரகலா கொடுத்துள்ள புகாரில் கூறியிருப்பது:எனது கையெழுத்துபோல் போட்டு தனியார் நிதி நிறுவனத்தில் 25 லட்சம் வரை என் கணவர் ராமசாமி கடன்வாங்கி உள்ளார். இன்னும் ஒரு கோடி ரூபாய் கடன் வாங்க வேண்டும் என்று என்னிடம் கையெழுத்து போட சொன்னார். நான் மறுத்துவிட்டேன். இதனால் எனக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். பெற்றோரிடம் பணம் வாங்கி கொடு என்றார். இதனால் நான் மன உளைச்சல் அடைந்தேன். கணவரால் என் உயிருக்கு ஆபத்து உள்ளது. எனவே, விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கவேண்டும்.இவ்வாறு புகாரில் கூறியிருந்தார்.இதன்படி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார், இன்று ராமசாமியை கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.