துரைப்பாக்கம்:கோழிக்கடை இறைச்சி வியாபாரி படுகொலை செய்யப்பட்டார். கள்ளக்காதலியே இந்த வெறிச்செயலில் ஈடுபட்டுள்ளார். பனையூரில் நள்ளிரவில் இந்த பயங்கர சம்பவம் நடந்துள்ளது. சென்னை அடுத்த பெரும்பாக்கத்தை சேர்ந்தவர் நாகேஸ்வர ராவ் (45). கோழி இறைச்சி கடை வியாபாரம் நடத்தி வந்தார். மனைவி செல்லபாக்யா, தொலைக்காட்சி ஒன்றில் பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு ஷாம் பிரகாஷ் (17) என்ற மகனும், பூஜா (13) என்ற மகளும் உள்ளனர்.
இந்நிலையில் பனையூர் ராஜீவ்காந்தி நகர் 3வது தெருவில் வசித்து வரும் திருமணமான கலையரசி என்பவருடன் நாகேஸ்வர ராவுக்கு பழக்கம் ஏற்பட்டது. அவருடன் 7 வருடமாக குடும்பம் நடத்தி வந்தார். இரவில் இவருடன் தங்குவதும், பகலில் செல்லபாக்யா வீட்டுக்கு செல்வதுமாக இருந்துள்ளது. கலையரசிக்கு ஒரு மகன் மற்றும் கலையரசன், மணிகண்டன் என்ற இரு தம்பிகள் உள்ளனர். கலையரசின் தம்பிகள் இருவருக்கும் பனையூரில் கோழி இறைச்சி கடை வைத்து கொடுத்துள்ளார் நாகேஸ்வரராவ்.
இந்நிலையில் இன்று காலையில் கலையரசி வீட்டில் இருந்து பயங்கர சத்தம் கேட்டது. வீட்டின் உரிமையாளர் மகேஸ்வரன் மற்றும் அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தனர். அங்கு கழுத்து, தலை போன்ற பகுதிகளில் பலத்த வெட்டு காயங்களுடன் நாகேஸ்வரராவ் கொலை செய்யப்பட்டு கிடந்தார். கலையரசி கதறி அழுது கொண்டிருந்தார். இதை பார்த்ததும் கானத்தூர் போலீசுக்கு அக்கம்பக்கத்தினர் தகவல் கொடுத்தனர்.
நீலாங்கரை உதவி கமிஷனர் உமா சங்கர், கானத்தூர் இன்ஸ்பெக்டர் சார்லஸ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். கொலைக்கு பயன்படுத்திய கத்தி வீட்டில் கிடந்தது. அதை போலீசார் கைப்பற்றினர். கொலை குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் கள்ளக்காதலியே கொலை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் வழக்கு பதிந்து கலையரசியை கைது செய்து விசாரணைக்காக காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.ரத்தக்கறை படிந்திருந்த கால்பாதம் வீட்டில் படிந்திருந்தது. இது யாருடைய கால் பாதம் என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
போலீசாரின் முதல்கட்ட விசாரணையில், கலையரசி வீட்டுக்கு நாகேஸ்வரராவ் வரும்போதெல்லாம் இரவில் இருவரும் மது அருந்துவதும் பின்னர் சண்டை போடுவதுமாக இருப்பார்களாம். நேற்றும் இதுபோன்று சத்தம் கேட்டுள்ளது. வழக்கமான சத்தம்தானே என அக்கம் பக்கத்தினர் இருந்துள்ளனர்‘ என்பது தெரியவந்துள்ளது. பணத்தகராறு ஏற்பட்டு அதில் நாகேஸ்வரராவ் கொலை செய்யப்பட்டாரா அல்லது கலையரசியுடன் வேறு யாராவது சேர்ந்து கொலை செய்தார்களா என போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.