கார்த்திக்கு டைரக்டர் போட்ட கண்டிஷன்
சென்னை:டைரக்டர் போட்ட கண்டிஷனால் பிரியாணி சாப்பிடுவதை நிறுத்தினார் கார்த்தி.வெங்கட்பிரபு இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள படம் ‘பிரியாணி. இப்பட ஷூட்டிங் நடந்தபோது பட யூனிட்டாருக்கு வகைவகையான பிரியாணி பரிமாறப்பட்டது. கார்த்தியும் பிரியாணி பிரியர் என்பதால் வெளுத்துக்கட்டினார். இப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. இதற்கான புரமோஷன் வேலைகளில் அடுத்த வாரம் முதல் ஈடுபட உள்ளார். இந்நிலையில் தனக்கு பிடித்த சுவையான பிரியாணி சாப்பிடுவதை திடீரென்று நிறுத்திவிட்டார் கார்த்தி. அதற்கு காரணம் உடல் எடையை குறைப்பதற்குதான் என்று அவரது தரப்பில் கூறப்படுகிறது.
‘அட்டகத்தி படத்தை இயக்கிய ரஞ்சித் அடுத்து ‘கபாலி என்ற படத்தை இயக்குகிறார். இதில் கார்த்தி ஹீரோ. முழுக்க ஆக்ஷன் கதையாக உருவாகும் இப்படத்துக்காக உடல் எடையை குறைத்து மெலிந்த தோற்றத்துக்கு மாற வேண்டும் என ரஞ்சித் கண்டிப்புடன் சொல்லிவிட்டாராம். பிடித்தமான பிரியாணியையும் மற்றும் சில ருசியான உணவு வகைகளை அவர் தியாகம் செய்திருப்பது இதற்குத்தான்.
தினமும் ஜிம்மிற்கு சென்று சிக்ஸ் பேக் உடற்கட்டுக்கு மாறும் வகையில் பயிற்சியில் ஈடுபடுகிறார் கார்த்தி. டைரக்டரின் எண்ணப்படி உடல் எடையை குறைக்கும் கார்த்தியை சமீபத்தில் சந்தித்தபோது மெலிந்து காணப்பட்டார். அதுபற்றி கேட்டபோது, ‘அடுத்த படத்துக்காக இயக்குனர் மெலிய சொல்லி இருக்கிறார். இதற்கிடையில் காய்ச்சல் வந்து தானாகவே மெலிந்துவிட்டேன். இப்போது மெலிவதற்கான வேலை எளிதாகிவிட்டது என்றார்.