தமிழகம், புதுச்சேரியில் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும்
சென்னை:ஆந்திரா அருகே வளி மண்டல மேல¢ அடுக்கில் ஏற்பட்டுள்ள சுழற்சி காரணமாக தமிழகம், புதுச்சேரியில் 2 நாட்களுக்கு மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு பருவ மழையால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் பலத்த மழை பெய்து, பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாநகரை பொறுத்தவரை கடந்த சில நாட்களாக தொடர்ந்தும் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
இந்நிலையில் ஆந்திரா அருகே வளி மண்டல மேலடுக்கில் ஏற்பட்டுள்ள சுழற்சி காரணமாக இன்றும் நாளையும் தமிழகத்தின் 23 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இது குறித்து வானிலை ஆய்வு மைய இயக்குனர் ரமணன் கூறியதாவது:
கடலோர ஆந்திரா, கடலோர கர்நாடகா, தெலங்கானா, கேரளா, ராயலசீமா மற்றும் வடக்கு மற்றும் தெற்கு தமிழகம், புதுச்சேரி, லட்சத்தீவு ஆகிய பகுதிகளில் 18 ம் தேதி வரை மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யும். சுழற்சி காரணமாக கடலோர ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் பலத்த மழை பெய்யும். மிக பலத்த மழை ராயலசீமாவில் பெய்யும். தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், நீலகிரி, திருப்பூர், கோவை, ஈரோடு, கரூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், மாவட்டங்களிலும் புதுச்சேரியிலும் மழை பெய்யும். புயல் எச்சரிக்கை ஏதும் இல்லை.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தமிழகத்தில் பெய்த மழை அளவு: நெய்வேலி அனல் மின்நிலையம், கடலூர் மாவட்டம் தொழுதூர் ஆகிய இடங்களில் தலா 4 மி.மீ, ஏற்காடு, காஞ்சிபுரம், மகாபலிபுரம், பரங்கிப்பேட்டை, தளி, செம்பரம்பாக்கம், பூந்தமல்லி& தலா 3 மி.மீ, தாமரைப்பாக்கம், திருவாலங்காடு, திருவள்ளூர், சங்கராபுரம், உத்திரமேரூர், விருத்தாசலம் தலா 2 மி.மீ.