புதுடெல்லி:மும்பை தொடர் குண்டு வெடிப்பு, தாஜ் ஓட்டல் தாக்குதல் சம்பவம் உள்பட பல்வேறு தீவிரவாத சம்பவங்களில் தொடர்புடையவனும், நிழல் உலக தாதாவுமான தாவூத் இப்ராகிமின் கூட்டாளியான அப்துல் கரீம் துன்டாவை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர். மும்பையில் கடந்த 1990ம் ஆண்டு நடைபெற்ற தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தில் 100க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இதே போல், கடந்த 2008ம் ஆண்டு நவம்பர் மாதம் மும்பையில் தாஜ் ஓட்டல், சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 200க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
இந்தியாவில் இது போல் பல்வேறு தாக்குதல் சம்பவங்களிலும், 20க்கும் மேற்பட்ட வழக்குகளில் நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம் மற்றும் அவனது கூட்டாளி பலரை போலீசார் தேடி வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு பாகிஸ்தான் மாஜி தூதரக அதிகாரி அளித்த பேட்டியில், தாவூத் இப்ராகிம் பாகிஸ்தானில் முன்பு இருந்ததாகவும், அதன்பின் அவன் அரபு நாட்டிற்கு தப்பி சென்றதாகவும் கூறிய செய்தி பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதற்கிடையே, தாவூத்தின் நெருங்கிய கூட்டாளியும், சர்வதேச போதைப் பொருள் கடத்தல் வியாபாரியுமான இக்பால் மெர்ச்சென்ட் என்ற இக்பால் மிர்ச்சி நேற்று இங்கிலாந்தில் மாரடைப்பில் இறந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.இந்நிலையில், தாவூத்தின் மற்றொரு கூட்டாளியும், லஷ்கர்&இ&தொய்பா, ஜமைத் உத்தவா போன்ற தீவிரவாத அமைப்புகளுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவனும், மும்பை குண்டு வெடிப்பு மற்றும் தாக்குதல் சம்பவங்களில் தேடப்படும் முதல் 20 குற்றவாளிகள் பட்டியலில் உள்ளவனுமான தீவிரவாதி அப்துல் கரீம் துன்டா கைது செய்யப்பட்டுள்ளான்.
டெல்லி போலீசார் அவனை கைது செய்துள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் இதுகுறித்து முழுமையாக தகவல்களை உடனடியாக வெளியிட போலீசார் மறுத்துவிட்டனர். நேபாள எல்லையில் பதுங்கியிருந்த அவன் கைது செய்யப்பட்டு, டெல்லிக்கு கொண்டு வரப்படுவதாகவும் ஒரு தகவல் வெளியானது. இந்த செய்தி தற்போது மும்பை தாதா வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.