சுதந்திர தின விழாவின் போது கவுரவிப்பதை புறக்கணிக்க 88 வயது தியாகி முடிவு
விழுப்புரம்: சுதந்திர போராட்டங்களில் தமிழகத்தை சேர்ந்த முன்னணி தலைவர்களுடன் பங்கேற்றவர் 88 வயது தியாகி வீரப்பன். சொந்த மண்ணிலேயே வாழ்ந்து இறக்க வேண்டும் என்பதற்காக 3 சென்ட் இடம் கேட்டு விழுப்புரம் மாவட்டத்தில் கலெக்டர்களாக பணியாற்றியவர்களிடம் கடந்த 10 ஆண்டுகளாக மனு கொடுத்து வருகிறார். கலெக்டர் சம்பத்திடம் நேற்று மனு கொடுத்துள்ளார். இதுகுறித்து தியாகி வீரப்பன் கூறியதாவது:
சுதந்திர போராட்டத்தில் கடந்த 1919ம் ஆண்டு முதல் ஈடுபட்டுள்ளேன்.
இதற்காக கும்பகோணம் சிறையில் ஒரு மாதம், கர்நாடக மாநிலம் அலிபுரம் சிறையில் 50 நாட்கள் அடைக்கப்பட்டு பல்வேறு சித்ரவதைகளை அனுபவித்துள்ளேன். என் மனைவி பாப்பாத்தி காலமாகிவிட்டார். எனக்கு 3 மகன்கள். மூத்த மகன் கணேசன் மாரடைப்பால் உயிர் இழந்துவிட்டார். அவரது 3 மகள்களில் இருவருக்கு திருமணம் முடித்துவிட்டேன். 3வது மகள், எனது இளைய மகன் மாணிக்கத்துடன் வாழ்ந்து வருகிறேன். 2&வது மகன் டிரைவராக இருக்கிறார். ரூ.7,100 அரசு ஓய்வூதியம் கிடைக்கிறது.
எனது இறுதி மூச்சு சொந்த இடத்திலேயே பிரிய வேண்டும் என்று விரும்புகிறேன். அதற்காக கடந்த 10 ஆண்டுகளாக 3 சென்ட் இடம் கேட்டு 150 முறை மனு கொடுத்துள்ளேன். இதுவரை என் மனு மீது எந்த கலெக்டரும் நடவடிக்கை எடுக்கவில்லை. ஆனால், சுதந்திர தின விழாவில் கலந்து கொள்வதற்கு மட்டும் அழைப்பிதழை கடமைக்காக அனுப்பி வருகின்றனர். இந்தாண்டும் எனக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது. அதில், நானும் கலந்து கொண்டு தேசிய கொடிக்கு மரியாதை செலுத்துவேன். அதே நேரத்தில், எனக்கு சால்வை அணிவித்து கலெக்டர் கவுரவிப்பதை புறக்கணிக்க போகிறேன். இவ்வாறு வீரப்பன் கூறினார்.