கோயம்பேடு பஸ் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் வடபழனி முருகன் கோயில் அர்ச்சகரிடம் விசாரணை
அண்ணாநகர்:கோயம்பேடு பஸ் ஸ்டாண்ட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இது தொடர்பாக வடபழனி முருகன் கோயிலில் அர்ச்சகரிடம் போலீசார் விசாரிக்கின்றனர்.சென்னை போலீஸ் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்றிரவு 11.30 மணிக்கு போன் வந்தது. அதில் பேசியவர், ‘‘கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது என்றார். இதை கேட்டுபோலீசார் அதிர்ச்சியடைந்தனர். வெடிகுண்டு சோதனை இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி தலைமையில் போலீசார் விரைந்தனர். மோப்ப நாய் ராஜாவும் சென்றது. பஸ் நிலையத்தில் நடைமேடை, பஸ்கள் நிறுத்தும் இடம், பயணிகள் அமரும் இடம், அங்குள்ள கடைகள், கார், பைக் பார்க்கிங் பகுதியில் தீவிர சோதனை நடத்தினர். நள்ளிரவு 12 மணியில் இருந்து அதிகாலை 3 வரை சோதனை நடத்தப்பட்டது. வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரிய வந்துள்ளது.
இதையடுத்து, மர்ம நபர் பேசிய போன் நம்பரை கண்டுபிடித்து விசாரித்தனர். வடபழனி முருகன் கோயில் அர்ச்சகராக உள்ள முருகானந்தம் என்பவரின் செல்போனில் இருந்து வெடிகுண்டு மிரட்டல் வந்திருப்பது தெரிந்தது. அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
கடந்த 3 நாளுக்கு முன் அவரது செல்போன் தொலைந்துவிட்டதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து, போனில் பேசிய நபர் யார் என்று போலீசார் தீவிரமாக விசாரணை நடத்துகின்றனர். பஸ் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.