காஷ்மீர் எல்லையில் மீண்டும் பாக். இன்றும் தாக்குதல்
ஜம்மு: காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் பகுதியில் கடந்த 6ம் தேதி பாகிஸ்தான் ராணுவத்தினர் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 5 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர். சண்டை நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலுக்கு பாதுகாப்பு துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி உள்பட பலதரப்பினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் விடிய விடிய அதே பூஞ்ச் பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் மீண்டும் அத்துமீறி துப்பாக்கிச் சூடு நடத்தினர். அதற்கு இந்திய வீரர்கள் பதிலடி கொடுத்தனர். ஏழு மணி நேரத்துக்கு மேல் இருதரப்புக்கும் துப்பாக்கி சண்டை நடந்தது.இந்நிலையில், ஜம்மு சர்வதேச எல்லை அருகே இன்று காலை பாகிஸ்தான் ராணுவத்தினர் மீண்டும் தாக்குதல் நடத்தினர். இந்திய வீரர்கள் உஷாராக இருப்பதால் உடனடியாக பதில் தாக்குதல் நடத்தினர். இந்த சண்டையில் இந்திய எல்லை பாதுகாப்பு படை வீரர் பவன்குமார் காயம் அடைந்தார் என்று ராணுவ அதிகாரிகள் கூறினர். தொடர்ந்து அங்கு பதற்றம் நிலவுகிறது.