திருநின்றவூரில் கோயில் உடைத்து அம்மன் தாலி, பணம் கொள்ளை
ஆவடி: ஆவடி அடுத்த திருநின்றவூர் கொசவன்பாளையம் என்.எஸ்.கே. நகரில் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் உள்ளது. நேற்று முன்தினம் பூஜை முடிந்ததும் நடையை பூட்டிவிட்டு பூசாரி, வீட்டுக்கு சென்றார். நேற்று கோயில் நடையை திறக்க வந்தபோது, முன்கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. உடனே கோயில் நிர்வாகி கணேஷ்குமாருக்கு தகவல் கொடுத்தார். உடனே அவர், சக நிர்வாகிகளுடன் கோயிலுக்கு விரைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது அம்மன் கழுத்தில் கிடந்த ஒரு பவுன் தாலி செயின், வெள்ளி குடம், மின் விசிறி மற்றும் பீரோவை உடைத்து அதிலிருந்த ரூ.21 ஆயிரம் பணம் கொள்ளை போனது தெரிந்தது. இதுகுறித்து திருநின்றவூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. எஸ்.ஐ சுப்பிரமணி வழக்கு பதிந்து விசாரித்து வருகிறார். இச்சம்பவம் பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.