1.25 லட்சம் லஞ்ச வழக்கில் ஐஏஎஸ் அதிகாரிக்கு 2 ஆண்டு சிறை
மதுரை: ரூ.1.25 லட்சம் லஞ்சம் வாங்கிய வழக்கில் ஐஏஎஸ் அதிகாரிக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
தமிழக சமூகநலத் துறையில் நிர்வாக இயக்குநராகப் பணியாற்றியவர் சுப்பிரமணியன். இவர் கடந்த 2002ல் தீபாவளியையொட்டி மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். மாவட்டந்தோறும் சென்று துறை அலுவலர்களை சந்தித்தார். அப்போது மதுரையில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் தங்கி, மதுரை மாவட்ட துறை அலுவலர்களை சந்தித்தார். அங்கு அவர் லஞ்சம் வாங்குவதாக மதுரை லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் பேரில் அரசு விருந்தினர் மாளிகையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை நடத்தினர். சுப்பிரமணியனிடம் ரூ 1.25 லட்சம் பணம் இருந்தது. அதற்கு சரியான கணக்கு விவரங்களை சுப்பிரமணியத்தால் கூற முடியவில்லை. அவரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதுதொடர்பான வழக்கு மதுரையில் உள்ள லஞ்ச ஒழிப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி கருணாநிதி, குற்றம் சாட்டப்பட்ட சுப்பிரமணியனுக்கு 2 ஆண்டு சிறைத்தண்டனை மற்றும் 2 ஆயிரம் அபராதம் விதித்துத் தீர்ப்பளித்தார்.