ஊரக வேலை திட்டத்தில் சம்பளம் வழங்காததால் அச்சிறுப்பாக்கம் வங்கியில் மக்கள் திடீர் முற்றுகை
மதுராந்தகம்:அச்சிறுப்பாக்கம் அருகே ஊரக வேலை திட்டத்தில் சம்பளம் வழங்காததால் ஆத்திரம் அடைந்த ஆண்கள், பெண்கள் என 500 பேர் இன்று காலை வங்கியை முற்றுகையிட்டு கோஷமிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. அச்சிறுப்பாக்கம் அருகே இந்தலூர் ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சியில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் ஏராளமானோர் பணி செய்கின்றனர். இவர்களுக்கு சம்பளம் பெறுவதற்கு கயப்பாக்கம் கிராமத்தில் உள்ள ஒரு வங்கியில் கணக்கு தொடங்கி உள்ளனர்.
இன்று காலை அந்த வங்கி முன்பு ஆண்கள், பெண்கள் சுமார் 500 பேர் திரண்டு முற்றுகை போராட்டம் நடத்தினர். தரக்குறைவாக பேசும் வங்கி மேலாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், சம்பளத்தை உரிய நேரத்தில் தர வேண்டும் என்று கோஷம் எழுப்பினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்ததும் சித்தாமூர் போலீசார் சென்று சமரசம் செய்தனர்.
இது பற்றி அவர்கள் கூறுகையில், கயப்பாக்கத்தில் உள்ள வங்கிக்கு பணம் எடுக்க வரும் எங்களை மேலாளர், ஊழியர்கள் தரக்குறைவாக பேசுகிறார்கள். எங்களுக்கு வழங்க வேண்டிய சம்பள பணத்தை உரிய நேரத்தில் வழங்குவதில்லை. நாளை வாருங்கள் என்று அலட்சியமாக கூறுகின்றனர். மறுநாள் சென்றாலும் பணம் தராமல் இழுத்தடிக்கின்றனர். இதில் உயர் அதிகாரிகள் கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்Õ என்றனர்.