பவானி அம்மன் கோயிலுக்கு சீர்வரிசை பொருட்களுடன் கிராம மக்கள் ஊர்வலம்
ஊத்துக்கோட்டை:பெரியபாளையம் பகுதியில் உள்ள கிராம மக்கள் சீர்வரிசை பொருட்களுடன் ஊர்வலமாக பவானி அம்மன் கோயிலுக்கு வந்து தரிசனம் செய்தனர்.
நேற்று ஆடி மாதம் 3வது ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு, பெரியபாளையம் அம்பேத்கர் நகர், தண்டுமா நகர், ராள்ளபாடி, அரியப்பாக்கம் ஆகிய கிராமங்களை சேர்ந்த பெண்கள் தாய் வீட்டு சீதனமாக மஞ்சள், குங்குமம், வளையல், புடவை, பூ, பழம் மற்றும் பொங்கல் பானைகள் ஆகியவற்றை சுமந்துகொண்டு பவானி அம்மன் கோயிலுக்கு ஊர்வலமாக வந்தனர். ஊர்வலத்துக்கு முன் டிராக்டரில் பவானி அம்மனின் பல்வேறு உருவங்கள் கொண்டு வரப்பட்டது. வழியெங்கும் வீடுகளில் தேங்காய், பழம் படைத்தனர். பின், கோயிலுக்கு வந்தவுடன் சீர்வரிசை பொருட்களை கொடுத்தனர். பானையில் பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டனர்.