நாய் குறுக்கே ஓடியதால் விபத்து பைக்கில் இருந்து விழுந்த வாலிபர் பலி; நண்பர் சீரியஸ்
ஊத்துக்கோட்டை:ரோட்டின் குறுக்கே ஓடிய நாயால் பைக்கில் இருந்து விழுந்த வாலிபர் பரிதாபமாக இறந்தார். நண்பரின் நிலைமை மோசமாக உள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே ஆத்துப்பாக்கத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் (38). இவரது நண்பர் மாணிக்கம் (45). சென்ட்ரிங் தொழிலாளர்களான இருவரும், நேற்றிரவு பென்னலூர்பேட்டை அருகே சென்றான்பாளையத்தில் நடந்த அம்மன் கோயில் தீ மிதி விழாவுக்கு சென்றனர். விழா முடிந்ததும் இருவரும் பைக்கில் ஊருக்கு திரும்பினர்.
ஊத்துக்கோட்டை ரெட்டி தெரு கோட்டை பகுதியில் நாய் ஒன்று திடீரென ரோட்டின் குறுக்கே ஓடியது. அதன் மீது மோதாமல் இருக்க பைக்கை சட்டென நிறுத்தினர். அப்போது இருவரும் பைக்கில் இருந்து தவறி விழுந்தனர். தலையில் படுகாயம் அடைந்த ஆறுமுகம், அந்த இடத்திலேயே இறந்தார்.
தகவல் கிடைத்ததும் ஊத்துக்கோட்டை இன்ஸ்பெக்டர் முத்துராமலிங்கம் மற்றும் போலீசார் சென்று படுகாயமடைந்த மாணிக்கத்தை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். ஆபத்தான நிலையில் உள்ள அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.