லண்டன்:வடக்கு ஜெர்மனியில் பாட்டி வீட்டு பரணில் ஒரு பெட்டியில் ‘மம்மி‘ இருப்பதை 10 வயது பேரன் கண்டுபிடித்தான். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.வடக்கு ஜெர்மனியில் உள்ள டைபோல்ஸ் பகுதியில் வசிப்பவர் லுட்ஸ் வோல்ப்காங்க் கெட்லர், பல் டாக்டர். இவரது 10 வயது மகன் அலெக்சாண்டர். ஒரு நாள் அருகில் உள்ள தனது பாட்டி வீட்டு மாடியில் விளையாடி கொண்டிருந்தான். அங்கு மாடி அறையில் பரணில் ஒரு சிறு அறை இருந்தது. பல ஆண்டுகளாக அது மூடியே கிடந்தது. அதற்குள் என்னதான் இருக்கிறது என்று ஆராய சிறுவனுக்கு ஆர்வம் பொங்கியது. உடனே பரணில் ஏறி தூசியை தட்டி சிறிய அறையை திறந்தான். அங்கு ஒரு மரப்பெட்டி இருந்தது.
அதை திறந்து பார்த்த சிறுவன் அதிர்ச்சி அடைந்தான். பெட்டிக்குள் ஒரு சடலம் கிடந்தது. அலறிய சிறுவன் உடனே கீழே இறங்கி வந்து விவரத்தை கூறினான். எல்லோரும் அதிர்ச்சி அடைந்து பரண் அறையில் கிடந்த பெட்டியை கீழே இறக்கினர். அதில் பதப்படுத்தப்பட்ட உடல் ஒன்று இருந்தது. சிறுவனின் தாய் இதுகுறித்து சம்பந்தப்பட்ட வல்லுநர்களுக்கு தகவல் கொடுத்தார். அவர்கள் விரைந்து வந்து பார்த்தனர். பெட்டிக்குள் இருந்தது பல ஆண்டுகளுக்கு முந்தைய அரிய மம்மி என்பதை அவர்கள் தெரிந்து கொண்டனர்.
இதுகுறித்து சிறுவனின் தந்தை லுட்ஸ் வோல்ப்காங்க் கூறுகையில், கடந்த 1950ம் ஆண்டு எனது தந்தை வடக்கு ஆப்ரிக்காவில் இருந்து இந்த மரப்பெட்டியை வாங்கி வந்தார். கப்பல் மூலம் கொண்டு வந்தார். தேவையற்றது என்று இருந்த இதில் மம்மி உள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இது உண்மையான மம்மிதானா என்பதை கண்டறிய சோதனைகள் மேற்கொள்ளப்பட உள்ளது என்றார்.எக்ஸ்ரே உள்ளிட்ட பல்வேறு சோதனைகளை செய்து மம்மி உண்மையானதா என்று ஆராய உள்ளனர்.இதற்காக மம்மியை பெர்லின் கொண்டு செல்ல உள்ளனர்.