பாகிஸ்தான் சிறையில் கொல்லப்பட்ட சரப்ஜித்சிங்கின் மகளுக்கு அரசு வேலை பஞ்சாப் முதல்வர் நேரில் வழங்கினார்
ஜலந்தர்:பாகிஸ்தான் சிறையில் சக கைதிகளால் அடித்துக் கொல்லப்பட்ட இந்தியர் சரப்ஜித்சிங்கின் மகளுக்கு அரசு வேலைக்கான உத்தரவை பஞ்சாப் முதல்வர் பிரகாஷ்சிங் பாதல் நேரில் வழங்கினார்.
பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த சரப்ஜித்சிங் என்பவர் கடந்த 90ம் ஆண்டு குடிபோதையில் எல்லை தாண்டி பாகிஸ்தான் சென்றார். இந்திய உளவாளி என்ற சந்தேகத்தின் அடிப்படையில் பாகிஸ்தான் ராணுவம் அவரை கைது செய்தது. அந்த சமயத்தில் லாகூரில் இரண்டு இடங்களில் குண்டு வெடித்தது. இதில் சரப்ஜித்சிங்குக்கு தொடர்பு இருப்பதாக கூறி அவர் மீது தீவிரவாத வழக்கு தொடரப்பட்டது. அந்நாட்டு நீதிமன்றம் சரப்ஜித்துக்கு மரண தண்டனை வழங்கியது. சுப்ரீம் கோர்ட்டும் இதை உறுதி செய்தது. அவரது கருணை மனுக்களை ஜனாதிபதி தள்ளுபடி செய்தார். அவருக்கு மன்னிப்பு வழங்க வேண்டும் என தொடர்ந்து இந்திய அரசு வலியுறுத்தி வந்தது.
இந்நிலையில் மும்பை தாக்குதல் தீவிரவாதி அஜ்மல் கசாப் கடந்த நவம்பர் மாதம் தூக்கிலிடப்பட்டார். இந்த தொடர்ந்து சரப்ஜித்தை தூக்கில் போட வேண்டும் என பாகிஸ்தானில் கோஷங்கள் வலுத்தன. லாகூர் சிறையில் இருந்த சரப்ஜித்சிங்கை சக கைதிகள் கொடூரமாக தாக்கினர். கோமா நிலைக்கு சென்ற சரப்ஜித்சிங் மருத்துவமனையில் உயிரிழந்தார். சரப்ஜித்சிங்குக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். அவர்களுக்கு அரசு வேலை வழங்கப்படும் என பஞ்சாப் அரசு அறிவித்தது. இந்நிலையில் சரப்ஜித்சிங்கின் மூத்த மகள் சுவபன்தீப் கவுருக்கு வருவாய் துறை அலுவலர் பதவி நேற்று வழங்கப்பட்டது. இதற்கான நியமன ஆணையை முதல்வர் பிரகாஷ்சிங் பாதல் நேரில் வழங்கினார். இளைய மகளுக்கு ஆசிரியர் வேலை வழங்கப்படும் என்றார். சரப்ஜித்சிங் குடும்பத்துக்கு மாநில அரசு சார்பாக ஏற்கெனவே ரூ. 1 கோடி நிதி உதவி அளிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.