நிலத்தகராறில் நடந்த பா.ஜ. பிரமுகர் கொலையில் 5 பேர் கைது
சேலம்: சேலத்தில் பாஜ பிரமுகர் கொலை வழக்கில் பெண் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர். சேலம் கன்னங்குறிச்சி சின்ன மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் முருகன்(47). பாஜ பிரமுகரான இவர், கறிக்கடை நடத்தி வந்தார். வீராணம் கன்னி மாரியம்மன் கோயில் பாலப்பட்டி புதுஏரிக்கரை அருகில் முஸ்லீம் மசூதிக்கு சம்பந்தப்பட்ட 5.25 ஏக்கர் நிலத்தில், முருகன் 4 ஏக்கர் நிலத்தையும், அதே பகுதியை சேட்டு என்ற ஆறுமுகம் 1.25 ஏக்கர் நிலத்தையும் குத்தகைக்கு எடுத்து பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், சேட்டு என்ற ஆறுமுகம் பயன்படுத்தி வரும் 1.25 ஏக்கர் நிலத்தை, முருகன் தரப்பினர் அபகரிக்கும் நோக்கத்துடன் நேற்று சென்று அங்கு கொட்டகை போட முயற்சி செய்துள்ளனர்.
இதில் ஏற்பட்ட தகராறில் முருகன் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். முருகனின் மாமனார் கணேசன், அவரது மகன் சீனிவாசன் ஆகியோர் காயம் அடைந்தனர். அதேபோல சேட்டு என்ற ஆறுமுகம், அவரது மகன் ஜெயராமன் ஆகியோரும் காயம் அடைந்தனர். இவர்கள் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தொடர்பாக வீராணம் போலீசார் வழக்கு பதிவு செய்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் சேட்டு என்ற ஆறுமுகம், ஜெயராமன் மற்றும் செல்வராஜ்(32), ராஜா(32), அங்காயி(50) ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.