நகை, பணத்துக்காக அப்பாவிகளின் உயிரை பலி வாங்கும் கொடுமை தமிழகத்தில் சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. மொபட்டில் சென்ற ஆசிரியை மீது பைக்கை மோதி செயினை பறிக்க முயன்றனர் கொள்ளையர்கள். செயின் கழுத்தை அறுத்ததில் ஆசிரியை பரிதாபமாக இறந்தார்.
மதுரை அருகே உள்ள மேலப்பனங்காடியை சேர்ந்தவர் லூயிஸ் பெர்னாண்டஸ். ஐகோர்ட் மதுரை கிளையில் வக்கீலாக உள்ளார். இவரது மனைவி ஜெயராணி (52), மதுரை கூடல்புதூர் அருகே உள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். நேற்று காலை மொபட்டில் பள்ளிக்கு சென்று கொண்டிருந்த ஜெயராணியை 2 பேர் பைக்கில் பின்தொடர்ந்தனர். ஆள்நடமாட்டம் இல்லாத பகுதியில், திடீரென ஜெயராணியின் மொபட் மீது பைக்கை மோதியுள்ளனர். தடுமாறி விழுந்த ஜெயராணியின் கழுத்தில் கிடந்த செயினை பறித்தனர். செயினை கையால் பிடித்துக் கொண்டு கொள்ளையர்களுடன் போராடியுள்ளார் ஜெயராணி. அவர் கூச்சல் போட்டதால், பொதுமக்கள் வந்துவிடுவார்களோ என்ற பதற்றத்தில் செயினை வேகமாக இழுத்துள்ளனர். தடிமனான செயின் என்பதால் ஜெயராணியின் கழுத்தை அறுத்துவிட்டது. நரம்பு கட்டாகி ரத்தம் கொட்டியது. பயந்துபோன கொள்ளையர்கள், செயினை விட்டுவிட்டு ஓடிவிட்டனர். ஜெயராணி, அந்த இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்.
சத்தம் கேட்டு ஓடிவந்த அந்த பகுதி மக்கள், ரத்த வெள்ளத்தில் பெண் இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். தகவலறிந்து வந்த கூடல்புதூர் போலீசார், ஜெயராணி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் வழக்கு பதிந்து, தப்பியோடிய பைக் ஆசாமிகளை தேடி வருகின்றனர். மனைவியின் உடலை பார்த்து கணவர் லூயிஸ் பெர்னாண்டஸ் கதறி அழுதது, கல்நெஞ்சையும் கரைய வைத்தது. ஆசிரியை கொல்லப்பட்ட பகுதியில் அடிக்கடி பெண்களிடம் நகை பறிப்பு, வழிப்பறி, திருட்டு போன்ற சம்பவங்கள் நடந்து வருவதாகவும் போலீசார் போதிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
அரை பவுன் கம்மலுக்காக பெண் கொலை, மூதாட்டியை கொன்று ஒன்றரை பவுன் கொள்ளை என்பது போன்ற சம்பவங்கள் அன்றாட செய்திகளாகிவிட்டன. குற்றங்கள் பெருகிவரும் நிலையில் ஒவ்வொருவருக்கும் போலீஸ் பாதுகாப்பு அளிப்பது என்பது சாத்தியமில்லாதது. ஆனால், குற்ற செயல்களில் ஈடுபடுவோருக்கு கடுமையான தண்டனை அளித்தால்தான் திருடர்களுக்கு பயம் ஏற்படும். கயவர்களுக்கு சட்டம் எப்போதும் கருணை காட்டக் கூடாது. தண்டனை கடுமையாகும்போதுதான் குற்றங்கள் குறையும். சட்டம், ஒழுங்கும் அமைதி பெறும்.