ஐதராபாத் குண்டுவெடிப்பு சந்தேக நபர்கள் உருவப்படம் விரைவில் வெளியீடு : டிஜிபி தகவல்
ஐதராபாத்: ஐதராபாத் குண்டுவெடிப்பில் சந்தேகப்படும்படியான நபர்களின் உருவப்படம் விரைவில் வெளியிடப்படும் என ஆந்திர டிஜிபி தினேஷ் ரெட்டி தெரிவித்
துள்ளார். ஆந்திர தலைநகர் ஐதராபாத்தில் கடந்த 21ம் தேதி இரண்டு இடங்களில் சக்தி வாய்ந்த குண்டுகள் வெடித்தன. இதில் 16 பேர் உயிரிழந்தனர். 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த குண்டுவெடிப்புக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இருப்பினும் புனேவில் கடந்த ஆண்டு நடைபெற்ற குண்டுவெடிப்புடன் ஒப்பிட்டு பார்க்கும்போது, இந்தியன் முஜாகிதீன் தீவிரவாத அமைப்பின் கைவரிசையாக இருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது. வழக்கமாக குண்டுவெடிப்பு நடந்தவுடன் நேரில் பார்த்தவர்கள் அளிக்கும் தகவல்கள் அடிப்படையில் சந்தேகப்படும்படியான நபர்களின் உருவப்படத்தை கம்ப்யூட்டரில் வரைந்து போலீசார் வெளியிடுவார்கள்.
ஆனால் ஐதராபாத் குண்டுவெடிப்பு நடந்து ஒரு வாரம் கடந்த நிலையிலும் இதுவரை உருவப்படம் எதுவும் வெளியிடப்படவில்லை. இதுகுறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு ஆந்திர டிஜிபி தினேஷ் ரெட்டி அளித்த பதில்: குண்டுவெடிப்பு சம்பவத்தை நேரில் பார்த்த பலரிடம் போலீசார் விசாரணை நடத்தி உள்ளனர். அவர்களிடம் இருந்து ஏராளமான தகவல்கள் கிடைத்துள்ளன. இவற்றின் அடிப்படையில் சந்தேகப்படும்படியான நபர்களின் உருவப்படத்தை கம்ப்யூட்டர் உதவியுடன் வரையும் முயற்சிகள் நடந்து வருகிறது. விரைவில் அவை வெளியிடப்படும். குண்டுவெடிப்பு தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. புலன் விசாரணை சரியான திசையில் சென்று கொண்டிருக்கிறது. விரைவில் குற்றவாளிகளை பிடித்து விடுவோம். இவ்வாறு தினேஷ் ரெட்டி கூறினார்.