ஆவடி: அம்பத்தூர் அடுத்த புதூர் குமரன் தெருவை சேர்ந்தவர் முருகன் (30). காய்கறி கடை வைத்துள்ளார். இவரது மனைவி மாரீஸ்வரி (25). இவர்களுக்கு சுவேதா (3), காவியா (4 மாதம்) ஆகிய குழந்தைகள் இருந்தன. முருகனின் பெற்றோர் காசி, கருப்பாயி ஆகியோர் இவர்களுடன் வசித்து வருகின்றனர். சுவேதாவுக்கு வலிப்பு நோய் இருந்தது. காவியாவுக்கு அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்பட்டு வந்தது. நேற்று காலை குழந்தைகளுக்கு தடுப்பூசி போட்டு வருவதாக மாமியாரிடம் கூறிவிட்டு அம்பத்தூர் சண்முகபுரத்தில் உள்ள புழல் ஏரிக்கு மாரீஸ்வரி சென்றார். ஏரியில் குழந்தைகளை தூக்கி வீசினார். 2 குழந்தைகளும் நீரில் மூழ்கி இறந்தனர். பின்னர் அங்குள்ள நாகவல்லி அம்மன் கோயிலில் அழுது கொண்டு இருந்தார்.
அந்த பகுதி மக்கள், மாரீஸ்வரியிடம் விசாரித்தபோது, ‘‘என்னையும் குழந்தைகளையும் மயக்க மருந்து கொடுத்து ஆட்டோ டிரைவர் கடத்தி வந்துவிட்டார். குழந்தைகள் என்ன ஆனார்கள் தெரியவில்லை‘‘ என்று கூறினார். இதுகுறித்து, அம்பத்தூர் காவல் நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இன்ஸ்பெக் டர் மில்லர்பொன்ராஜ், எஸ்ஐ ராம்சிங் ஆகியோர் சென்று, மாரீஸ்வரியிடம் தீவிரமாக விசாரித்தனர். அப்போது, குழந்தைகளுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் ஏரியில் வீசி கொன்றதை ஒப்புக் கொண்டார். போலீசார், மாரீஸ்வரி மீது கொலை வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். அவரை இன்று காலை அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.