டெல்லி மாணவி பேமிலியை சந்திக்க போகிறார் இயக்குனர்
சென்னை: தமிழ்நாட்டில் மலைவாழ் மக்கள் பலாத்காரம் செய்யப்பட்ட ‘வாச்சாத்தி சம்பவத்தை திரைப்படமாக இயக்கியவர் ரவி தம்பி. இவர் டெல்லி மாணவி பலாத்காரம் உள்பட 3 நிஜ சம்பவங்களை மையமாக வைத்து ‘தடை செய்யப்பட்ட பகுதி என்ற படம் இயக்குகிறார். இதுபற்றி அவர் கூறியதாவது: டெல்லியில் மருத்துவ கல்லூரி மாணவி பலாத்காரம், கோவை பெண் பலாத்காரம் மற்றும் தர்மபுரி காதல் திருமண கலவரம் ஆகிய 3 சம்பவங்களையும் இணைத்து ‘தடை செய்யப்பட்ட பகுதி என்ற பெயரில் எழுதி இயக்குகிறேன்.
இதுபற்றிய உண்மை நிலவரங்களை பல்வேறு புள்ளிவிவரங்களுடன் சேகரித்து உள்ளேன். டெல்லி மாணவிக்கு நடந்த கொடூர சம்பவத்தால் இறந்த மாணவியின் குடும்பத்தார் பாதிப்புக்குள்ளாயினர். அவர்களை நேரில் சந்தித்து நடந்த விவரங்கள்பற்றி கேட்டறிந்து படமாக்க உள்ளேன். சாஜு ஹீரோ. சூர்யப்ரியா ஹீரோயின். சோனா, ரஞ்சனா, முத்துக்காளை, நெல்லை சிவா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். டி.சாய்நட்ராஜ் ஒளிப்பதிவு. வில்லியம்ஸ் ராஜா இசை. ஹரி சினி பிலிம்ஸ் தயாரிப்பு. இவ்வாறு ரவிதம்பி கூறினார்.