சென்னை: போகி பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது. சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படாமல் புகையில்லா போகி கொண்டாட வேண்டும் என்று தமிழக மாசுக் கட்டுப்பாடு வாரியம் அறிவுறுத்தி உள்ளது. டயர், ரப்பர் போன்ற பொருட்களை எரிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளது. போகி பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது. பழையன கழிதலும் புதியன புகுதலும் என்ற நோக்கில் வீடுகள், கடைகளில் தேவையற்ற பழைய பொருட்களை அதிகாலை தீயில் போட்டு எரிப்பார்கள். இந்த நடைமுறை மாறி போகி பண்டிகைக்கு முதல் நாள் இரவில் இருந்தே டயர், ரப்பர், பிளாஸ்டிக் போன்ற பொருட்களை தீயில் போட்டு எரிக்கின்றனர். இதனால் காற்று மாசடைகிறது. மேலும், புகைமூட்டத்தால் சாலைகள் கண்ணுக்கு தெரியாமல் போகின்றன.
இந்நிலையில், நாளை சுற்றுச் சூழலை பாதிக்காமல் புகையில்லா போகியை கொண்டாட வேண்டும் என்று மாசுக் கட்டுப்பாடு வாரியம் தமிழகம் முழுவதும் தீவிர பிரசாரம் செய்து வருகிறது. பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்காக சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு பொதுமக்கள் ரயில், பஸ் மூலம் செல்கின்றனர். இதற்காக கோயம்பேட்டில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. கோயம்பேட்டில் நேற்று மாலை முதலே பயணிகள் கூட்டம் அலைமோதியது. சிறப்பு ரயில்களும் இயக்கப்படுவதால் எழும்பூர், சென்ட்ரல் ரயில் நிலையங்களிலும் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிகிறது. மேலும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ளவர்களும் சொந்த ஊருக்கு பயணமாகி வருகின்றனர்.
இந்நிலையில், நாளை போகி பண்டிகையன்று அதிகாலை வீடுகளில் உள்ள பழைய துணிகள், பாய், துடைப்பம் போன்றவற்றை தீயிட்டு எரிப்பார்கள். ஆனால், டயர், ரப்பர், பிளாஸ்டிக் பொருட்களையும் போட்டு தீயிட்டு எரிப்பதால், கரும்புகை மூட்டம் ஏற்படுகிறது. சுற்றுச் சூழலும் பாதிக்கிறது. மேலும், சுவாச பிரச்னை, கண் எரிச்சல், இருமல், நுரையீரல் பாதிப்பு போன்ற சுகாதார சீர்கேடுகளும் ஏற்படுகிறது. மேலும், நச்சுக்காற்று, கரிப்புகை கலந்த பனிமூட்டம் ஆகியவற்றால் விமானம் மற்றும் சாலை போக்குவரத்தும் பாதிக்கப்படுகிறது. புகைமூட்டத்தில் வாகனங்கள் விபத்தில் சிக்கி கொள்கின்றன. இதுபோன்ற சுகாதார சீர்கேடுகளை தடுக்க, தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம், விழிப்புணர்வு பிரசாரம் செய்து வருகிறது.
கடந்த 10ம் தேதி முதல் ஆட்டோ, வேன்களில் ஒலி பெருக்கியை கட்டி வீதி, வீதியாக சென்று போகியன்று பிளாஸ்டிக் பொருட்களை எரிக்க கூடாது என்றும், புகையில்லா போகி கொண்டாட பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றும் பிரசாரம் செய்து வருகின்றனர். கலை நிகழ்ச்சிகள் நடத்தியும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. பழைய மரம், வறட்டி தவிர வேறு எதையும் எரிப்பதற்கு உயர்நிதிமன்றம் தடை விதித்துள்ளது. இதை மீறி டயர், பிளாஸ்டிக், ரப்பர் போன்ற சுற்றுச்சூழலை பாதிக்கும் பொருட்களை எரிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் கூறியுள்ளது. போகியன்று காற்றில் எந்த அளவுக்கு மாசு கலக்கிறது என்பதை கண்டறிய சென்னை, கோவை, திருச்சி, மதுரை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் கருவி வைக்கப்பட்டுள்ளது.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook