செத்த பிறகுகூட பெண்களுக்கு பாதுகாப்பில்லை. சுடுகாட்டில் புதைத்த பெண்ணின் உடலை தோண்டி எடுத்திருக்கிறார் ஒருவர். அந்த உடலை வைத்து பாடை கட்டி பழகியதாக போலீசாரிடம் கூறியிருக்கிறார். ஆனால் அதற்குள் பலவாறாக வதந்தி பரவியதால் பரபரபப்பு ஏற்பட்டது. வேலூர் அடுத்த கருகம்புத்தூர் பாலாற்றங்கரையில் சுடுகாடு உள்ளது. இங்கு இளம்பெண் சடலம் கிடந்தது. தகவல் பரவியதால் கூட்டம் கூடியது. சடலத்தின் தலை மொட்டை அடிக்கப்பட்டிருந்தது. வெட்டி தைத்ததற்கான அறிகுறிகளும் காணப்பட்டன. அந்த பெண் கருகம்புத்தூரை சேர்ந்த சிவகாமி போல இருப்பதாக சிலர் கூறினார்கள். உடனடியாக அவரது தந்தைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர் பதறியடித்து சுடுகாட்டுக்கு வந்தார்.
பட்டதாரியான சிவகாமி, கடும் தலைவலி ஏற்பட்டதால் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி இறந்தார். சுடுகாட்டில் 3ம் தேதி உடலை அடக்கம் செய்தோம் என்று தந்தை கூறினார். அதே பகுதியை சேர்ந்த வடிவேலன் என்பவர் மீது போலீசுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரை பிடித்து விசாரித்தனர். சடலத்தை தோண்டி எடுத்ததை ஒப்புக்கொண்டார். என் அப்பா ரங்கநாதன், பாடை கட்டும் தொழில் செய்தார். 5 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். அவரது தொழிலை செய்ய விரும்பினேன். இதே தொழிலை செய்து வந்த வேறொருவரிடம் சென்று வேலையில் சேர்த்துக் கொள்ளுமாறு கூறினேன். ‘உனக்கு இதை பற்றி தெரியாது’ என்று கூறி அனுப்பிவிட்டார். அவர் கட்டிய பாடையில்தான் சிவகாமி உடலை சுடுகாட்டுக்கு எடுத்து வந்தார்கள். அதை வைத்தே வேலை கற்றுக்கொள்ள முடிவெடுத்தேன்.
பாடை கட்டி பயிற்சி பெறுவதற்காக, புதைக்கப்பட்ட சிவகாமி சடலத்தை வெளியே எடுத்தேன். பிறகு குச்சிகளை வைத்து பாடை கட்டி பழகினேன். அதற்குள் பொழுது விடிந்து விட்டது. மண்டபத்தில் ஒரு ஓரமாக உடலை வீசிவிட்டு போய்விட்டேன் என வடிவேலன் வாக்குமூலம் அளித்ததாக போலீசார் கூறினர். வடிவேலனை போலீசார் கைது செய்தனர். இறந்தாலும் உடலுக்கு ஒரு மரியாதை இருக்கிறது. அதனால்தான் மரியாதையுடன் இறுதிச் சடங்குகள் செய்கிறோம். ஓராண்டு வரை நினைவஞ்சலி செலுத்துகிறோம். சுடுகாட்டுப் பக்கம் இரவு நேரத்தில் யாரும் போவதில்லை என்பதால், சடலத்தை தோண்டி எடுத்தது யாருக்கும் தெரியவில்லை. வேலை கற்றுக் கொள்ள சடலத்தை தோண்டி எடுத்தது மிகப் பெரிய குற்றம் என்பதை அவருக்கு புரிய வைக்க வேண்டியது போலீசாரின் கடமை.