பார்வை கோளாறை போக்கும் கண் செல்கள் : இங்கிலாந்து விஞ்ஞானிகள் தகவல்
சவுத்ஆம்டன்: கண் செல்களை வெளியே எடுத்து வளர்த்து, மீண்டும் கண்ணில் பொருத்தினால் பார்வை கோளாறுகள் நீங்கும் என்று இங்கிலாந்து விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். கண்ணில் உள்ள செல்களைக் கொண்டே பார்வை கோளாறை சரிசெய்வது குறித்த ஆராய்ச்சி இங்கிலாந்தின் சவுத்ஆம்டன் பல்கலைக்கழகத்தில் நடந்தது. இங்கிலாந்தின் பிரபல கண் மருத்துவரும் பேராசிரியருமான ஆண்ட்ரூ லோடரி தலைமையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அவர் கூறியிருப்பதாவது: விழித்திரை பாதிப்பு காரணமாக பலர் பார்வை இழக்கின்றனர்.
இங்கிலாந்தில் சராசரியாக 70 வயது பெரியவர்களில் மூன்றில் ஒருவர் ரெட்டினிடிஸ் பிக்மென்டோசா என்ற பாதிப்பு காரணமாக பார்வை இழக்கின்றனர். கண்ணின் முன் பகுதியில் இருக்கும் கார்னியல் லிம்பல் செல், ஸ்டெம்செல்லுக்கான குணாதிசயங்களை கொண்டிருக்கிறது. இதை வெளியே எடுத்தால் வளருமா என்பது தொடர்பாக தீவிர ஆராய்ச்சி செய்து வருகிறோம். பார்வை பாதிக்கப்பட்டவரின் கார்னியல் லிம்பல் செல்லை வெளியே எடுத்து முதலில் வளர்க்க வேண்டும். ஆரோக்கியமான செல்களாக அது வளர்ந்த பிறகு, கண்ணில் பாதிக்கப்பட்ட செல்களை அகற்றிவிட்டு, இவற்றை பொருத்தினால் பார்வை கோளாறு நீங்கும். தெளிவான பார்வை கிடைக்கும்.