அசாமில் மீண்டும் வன்முறை 2 பேர் கொலையால் பதற்றம்
கவுகாத்தி: அசாம் மாநிலத்தில் நேற்று ஏற்பட்ட திடீர் வன்முறையில் 2 பேர் கொல்லப்பட்டனர். இதனால் அங்கு மீண்டும் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. அசாம் மாநிலத்தின் கோக்ரஜார் மாவட்டத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் போடோ பழங்குடியின மக்களுக்கும், வங்கதேசத்தில் இருந்து குடியமர்ந்த முஸ்லிம்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. கோக்ரஜாரில் தொடங்கிய வன்முறை, துப்ரி, சிராங் உள்ளிட்ட மாவட்டங்களுக்கும் பரவியது. ஆயிரக்கணக்கான வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டன. கலவரத்தில் 90 பேர் கொல்லப்பட்டனர். லட்சக்கணக்கானோர் வீடுகளை இழந்து முகாம்களில் தஞ்சமடைந்தனர். செப்டம்பர் வரை வன்முறை சம்பவங்கள் நடந்து வந்தது. அதன்பின்னர் அமைதி திரும்பியதால் முகாம்களில் இருந்த மக்கள் தங்கள் வீடுகளுக்கு திரும்பி வருகின்றனர். இந்நிலையில், கோக்ரஜார் மாவட்டத்தில் மீண்டும் வன்முறை ஏற்பட்டுள்ளது. கோசய்கான் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பஜூகான் கிராமத்துக்கு நேற்று துப்பாக்கிகளுடன் வந்த மர்ம கும்பல், வயலில் வேலை பார்த்துக் கொண்டு இருந்த விவசாயிகளை நோக்கி சரமாரியாக சுட்டது. இதில் ஒருவர் இறந்தார். 2 பேர் படுகாயம் அடைந்தனர். இதற்கு பதிலடியாக அருகில் உள்ள பட்லன்மரா கிராமத்தில் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் இளைஞர் ஒருவர் அரிவாளால் வெட்டி கொல்லப்பட்டார். இந்த சம்பவங்களால் அங்கு மீண்டும் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.