சிம்லா: இமாச்சல பிரதேச சட்டசபை தேர்தல் இன்று விறுவிறுப்பாக நடந்தது. இமாச்சல பிரதேசத்தில் கடந்த 2007ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. முதல்வர் பிரேம் குமார் துமல் தலைமையிலான ஆட்சி முடிய உள்ளதை தொடர்ந்து, புதிய ஆட்சியை தேர்வு செய்வதற்காக இன்று தேர்தல் நடந்தது. மாநிலத்தில் மொத்த தொகுதிகளின் எண்ணிக்கை 68. இவற்றுக்கு 459 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இவர்களில் 27 பேர் பெண் வேட்பாளர்கள். அனைத்து தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக வாக்குப் பதிவு நடந்தது. மாநிலத்தில் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 46 லட்சம். இவர்களுக்காக 7250 வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன. காலை 8 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கியதும் மக்கள் ஆர்வத்துடன் வந்து நீண்ட வரிசைகளில் நின்று வாக்களித்தனர். தேர்தலையொட்டி பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. 9 ஆயிரம் துணை ராணுவ படையினருடன் 14 ஆயிரம் உள்ளூர் போலீசும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆளும் பாஜ, முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரசும் 68 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன. இது தவிர பகுஜன் சமாஜ் 66, இமாச்சல் லோக்ஹித் கட்சி 36, திரிணாமுல் காங்கிரஸ் 25, சமாஜ்வாடி 16, மார்க்சிஸ்ட் 15, தேசியவாத காங்கிரஸ் 12 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளன. எனினும் நிஜப்போட்டி பாரதிய ஜனதாவுக்கும், காங்கிரசுக்கும் இடையேதான் உள்ளது.
பாஜவிடம் இருந்து ஆட்சியை எப்படியாவது கைப்பற்றி விட வேண்டும் என்ற முனைப்பில் காங்கிரஸ் தீவிர முயற்சிகள் மேற்கொண்டது. பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் மாநிலத்தில் முகாமிட்டு பிரசாரம் மேற்கொண்டனர். மாநிலத்தில் பாஜ ஊழல்களை சுட்டி காட்டி பேசினர். சிம்லா (ரூரல்) தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் முக்கிய வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான வீரபத்ர சிங், தற்போதைய முதல்வர் துமல் மீது சரமாரியாக ஊழல் குற்றசாட்டுகளை கூறினார். ஸ்பெக்ட்ரம், நிலக்கரி, காமன்வெல்த் ஊழல் விவகாரங்கள் மற்றும் டீசல் விலை உயர்வு, சமையல் கேஸ் கட்டுப்பாடு பிரச்னைகளை முன்னிலைப்படுத்தி பாரதிய ஜனதா பிரசாரம் செய்தது. மூத்த தலைவர் அத்வானி, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி போன்றோர் பா.ஜ. வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரித்தனர். இரு கட்சிகளுக்குமே சமமான வெற்றி வாய்ப்பு இருப்பதாக தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன. இமாச்சல பிரதேசத்தை தொடர்ந்து அடுத்த மாதம் 13, 17ம் தேதிகளில் குஜராத் சட்டமன்ற தேர்தல் இரு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதைத் தொடர்ந்து இரு மாநிலங்களிலும் சேர்த்து டிசம்பர் 20ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. தேர்தல் முடிவு தெரிய ஒன்றரை மாதங்கள் இமாச்சல பிரதேச வேட்பாளர்கள் காத்திருக்க வேண்டி உள்ளது.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook