பீஜிங்: சீனாவை சேர்ந்தவர் வாங் சுஷாங் (84). பிள்ளைகள் கவனிக்காததால் தனியே வசித்து வரும் இவர் சமீபத்தில் மாடலிங் துறையில் இறங்கிவிட்டார். படம் வரைந்து பயிற்சி பெறும் ஓவிய கல்லூரி மாணவ, மாணவிகள் முன்பு நிர்வாணமாக உட்கார்வதுதான் இவரது வேலை. இதுபற்றி அவர் மேலும் கூறியதாவது: எனக்கு 2 மகன், 2 மகள். இளைய மகன் 5 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டான். மற்ற பிள்ளைகளுக்கு திருமணமாகி தனித்தனியே வசிக்கின்றனர். மனைவி இறந்து 15 ஆண்டுகள் ஆகிறது. தனியாகத்தான் வசிக்கிறேன். மகள்கள் இருவரும் மாதம் ஒருமுறை வந்து என்னை பார்த்துவிட்டு போவார்கள். மகன் வாரம் ஒருமுறை வருவான். ஏதாவது சாப்பிட கொடுத்துவிட்டு போவான். சேர்ந்த அழுக்கு துணிகளை எடுத்து சென்று, அடுத்த வாரம் வரும்போது துவைத்து எடுத்து வருவான். மற்றபடி என் வேலைகளை நான்தான் பார்த்துக் கொள்கிறேன். மாத பென்ஷன் ரூ.6,800 செலவுக்கு போதவில்லை. அதனால், மாடலிங் தொழிலுக்கு செல்கிறேன். ஓவிய கல்லூரி மாணவ, மாணவிகள் முன்பு நிர்வாணமாக உட்கார்ந்திருக்க வேண்டும். முக்கால் மணி நேரம் சிலை போல ஆடாமல், அசையாமல் உட்கார வேண்டும். இதற்கு ரூ.900 வரை தருகிறார்கள். இதன்மூலம் மாதம் ரூ.12 ஆயிரம் சம்பாதிக்கிறேன். நிர்வாண போஸ் கொடுப்பது கூச்சமாக இல்லை. தள்ளாத வயதிலும் சொந்தக் காலில் நிற்பது பெருமையாகத்தான் இருக்கிறது. இவ்வாறு வாங் சுஷாங் கூறினார். மக்கள்தொகையை கட்டுப்படுத்துவதாக கூறி குறைவாக குழந்தை பெற்றுக் கொள்ள அரசு வலியுறுத்துகிறது. இருக்கும் ஒரு பிள்ளையும் கவனிக்காமல் போவதால் பல பெற்றோர் கடைசி காலத்தில் கஷ்டப்படுகின்றனர். திருமணமானதும், பெற்றோரை விட்டுவிட்டு தொழில் நகரங்களை நோக்கி இளைஞர்கள் ஓடுகின்றனர். இது போன்ற காரணங்களால் சீனாவில் சீனியர் சிட்டிசன்கள் பலர் தனிமையில் வாழவேண்டிய சூழல் நிலவுகிறது. அதிக வயதிலும் கஷ்டப்பட்டு உழைக்க வேண்டிய நிலை உள்ளது. வாங் சுஷாங் போல பல முதியவர்கள் நிர்வாண மாடலிங் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook