மருத்துவ நுழைவு தேர்வை எதிர்த்து ஐகோர்ட்டில் ஆந்திர அரசு வழக்கு
ஐதராபாத்: அகில இந்திய அளவில் மருத்துவ பட்டமேற்படிப்புகளில் சேருவதற்காக மத்திய அரசு நடத்தும் பொது நுழைவு தேர்வை எதிர்த்து ஆந்திர அரசு ஐதராபாத் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்தியாவில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் அடுத்த ஆண்டு முதல் மாணவர் சேர்க்கையை மத்திய அரசு அரசு நடத்தும் பொது நுழைவு தேர்வு மதிப்பெண் அடிப்படையில் நடத்த வேண்டும் என அண்மையில் மத்திய அரசு உத்தரவிட்டது. முதல் கட்டமாக மருத்துவ பட்டமேற்படிப்புகளுக்கு வரும் 23ம் தேதி நுழைவு தேர்வு நடக்கிறது. இது மாநிலங்களில் உள்ள இடஒதுக்கீட்டுக்கு பாதகத்தை ஏற்படுத்தும் என பல்வேறு மாநில அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
அந்தந்த மாநில ஐகோர்ட்டுகளில் வழக்கும் தொடர்ந்துள்ளன. இந்நிலையில் ஆந்திர அரசும் மருத்துவ பொது நுழைவு தேர்வை எதிர்த்து நேற்று ஐதராபாத் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கை இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு பெஞ்ச் நேற்று விசாரித்தது. ஆந்திர அரசு சார்பாக கூடுதல் அட்வகேட் ஜெனரல் கே.ஜி.கிருஷ்ண மூர்த்தி ஆஜராகி, ÔÔஆந்திர மாநிலம் உருவான போது பல பிராந்தியங்கள் மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்தன. அவற்றை முன்னுக்கு கொண்டு வர வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து ஆந்திர மாநிலத்துக்கு இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தில் ஷரத்து 371(டி)யின் படி சலுகைகள் வழங்கப்பட்டது. இதன்படி பின்தங்கிய பிராந்தியங்களுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் இடஒதுக்கீடு அளிக்கப்பட்டு வருகிறது.
மத்திய அரசின் பொது நுழைவு தேர்வினால் இந்த இடஒதுக்கீடு பாதிக்கப்படும். இது ஆந்திர அரசுக்கு இந்திய அரசியல் அமைப்பு சட்டம் வழங்கிய சிறப்பு அதிகாரங்களை பறிக்கும் செயலாகும்ÕÕ என்றார். இந்த வாதத்தை நீதிபதிகள் ஏற்றுக் கொண்டனர். மத்திய அரசின் விதிமுறைகள் மற்றும் சட்டதிட்டங்கள் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை மீறும் வகையில் இருக்கக்கூடாது என கருத்து தெரிவித்தனர். அதே நேரம் இந்த வழக்கில் எந்த உத்தரவையும் அவர்கள் உடனடியாக பிறப்பிக்கவில்லை. இந்த வழக்கு தொடர்பாக இந்திய மருத்துவ கவுன்சில் வரும் திங்கள்கிழமை பதில் அளிக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், வரும் செவ்வாய்க்கிழமைக்கு வழக்கை ஒத்திவைத்தனர்.