லாரி மீது கார் மோதி விபத்து : முன்னாள் மத்திய அமைச்சர் பலி
சித்தூர்: முன்னாள் மத்திய அமைச் சர் எர்ரான் நாயுடு (55) விபத்தில் சிக்கி பலியானார். தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்தவர் எர்ரான் நாயுடு. ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தை சேர்ந்த இவர் 4 முறை எம்எல்ஏ, 4 முறை எம்பியாகவும், மத்தியில் பாஜக ஆட்சியின்போது கிராம வளர்ச்சித்துறை அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார். தற்போது தெலுங்கு தேசம் கட்சியின் உயர்மட்ட குழு உறுப்பினராக உள்ளார். தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு மகபூப் நகரில் பாதயாத்திரை மேற்கொண்டு வருகிறார். அவருடன் எர்ரான் நாயுடுவும் கலந்துகொண்டிருந்தார். இந்நிலையில், விசாகப்பட்டினத்தில் நேற்று நடந்த கட்சி பிரமுகர் திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்ட எர்ரான் நாயுடு இன்று அதிகாலை 3 மணியளவில் ஸ்ரீகாகுளத்துக்கு காரில் சென்றார்.
ஸ்ரீகாகுளம் மாவட்டம் ருனஸ்தலம் கூட்ரோடு அருகே சென்றபோது எதிரே வந்த ஆயில் டேங்கர் லாரி மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில் எர்ரான் நாயுடு, ஸ்ரீகாகுளம் மாவட்ட தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சவுத்ரி பாப்ஜி உள்பட 4 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் ஸ்ரீகாகுளத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி எர்ரான் நாயுடு இறந்தார். இதையடுத்து பாதயாத்திரையை கைவிட்டு சந்திரபாபுநாயுடு ஸ்ரீகாகுளத்திற்கு விரைந்தார். ஸ்ரீகாகுளத்தில் உள்ள மாவட்ட தெலுங்கு தேச கட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள எர்ரான் நாயுடு உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இன்று மாலை இவரது சொந்த கிராமமான நிம்மடா கிராமத்தில் இறுதி சடங்குகள் நடைபெற உள்ளது. இவருக்கு விஜயகுமாரி என்ற மனைவியும், ஒரு மகன், மகள் உள்ளனர்.