மழையின் இதம் மனசுக்கு சுகம் என்றால் மழையினால் பரவும் நோய்கள் உடம்புக்கு சோகம்.
ஊருக்குள் இருக்கிற ஒட்டுமொத்த அழுக்கையும் இழுத்துக்கொண்டோடும் மழைநீரில்
கண்ணுக்குத் தெரியாத கிருமிகளும் உற்சாகமாக நீந்திக்கொண்டிருக்கும். தன்
வழியில் சிக்கியவர்களை எல்லாம் நோயில் விழ வைத்துவிடும். இப்படிப் பரவும்
நோய்களிலிருந்து தப்பிக்க, வருமுன் காக்கும் பாலிஸிதான் பெஸ்ட் என்கிறார்
சென்னையைச் சேர்ந்த பொதுநல மருத்துவர் குணசேகரன்.
மழை நாட்களில்
எங்கு பார்த்தாலும் தண்ணீர் ஒடிக்கொண்டே இருக்கும். இதனால் எளிதில் நோய்க்
கிருமிகள் பரவும் வாய்ப்பு அதிகம்.. தண்ணீர் மூலம் எளிதில் பரவக்கூடிய
கிருமிகளில் முக்கியமானது இன்ஃபுளூயன்ஸா. இன்ஃபுளூயன்ஸா வைரஸ்
நோய்க்கிருமிகள் முதலில் வயதானவர்களையும், குழந்தைகளையும் தாக்கும். அதேபோல
ஏற்கனவே நோயுற்றிருப்பவர்களிடமும் தன் கைவரிசையைக் காட்டும்.
இன்ஃபுளூயன்ஸா
தாக்கியப்பின் உடலின் நோய் எதிர்ப்புசக்தியைக் குறைத்து, பாக்டீரியா
தாக்குதலுக்கு வழி ஏற்படுத்தித் தரும். இருமல், சளி, தும்மல் என
ஆரம்பிக்கும் தாக்குதல் காய்ச்சலில் முடியும். இதை சாதாரண காய்ச்சலாக
நினைத்து கவனிக்காமல் விட்டுவிட்டால் அதுவே நிமோனியா காய்ச்சலாக மாறும்
அபாயமும் இருக்கிறது. அதனால் தொடர்ச்சியான காய்ச்சல் இருந்தால் உடனே
மருத்துவரை அணுகுவது அவசியம்.
வைரஸ் கிருமிகள் காற்றில் துகள்கள்
வடிவில் பரவும். எனவே ஒருவர் பயன்படுத்திய டவல், கைக்குட்டை ஆகியவற்றை
மற்றவர் பயன்படுத்தாமல் இருப்பது நல்லது. மேலும் தும்மல், இருமல் போன்ற
காரணத்தினாலும் வைரஸ் காய்ச்சல் பிறரை எளிதில் தாக்கும்.
மழைக்காலத்தில்
விலைவாசி போல விறுவிறுவென உயர்ந்துவிடும் கொசுக்களின் எண்ணிக்கையும்.
கொசுக்கள் மூலமாக எளிதில் பரவக்கூடியது டெங்கு காய்ச்சல். இதற்கும்
உடல்வலி, சளி, இருமல் போன்ற அறிகுறிகள் இருக்கும். கொசுக்கள் மூலம் பரவும்
வைரஸ்கள் ரத்த உறைவு அணுக்களின் எண்ணிக்கையை குறைத்து விடும். இதை
கவனிக்காமல் விட்டுவிட்டால் நோய் தீவிரமாகி உடலின் பல பகுதிகளில் ரத்தக்
கசிவு ஏற்படும். ரத்தக் கசிவு மூளையில் ஏற்பட்டால் உயிர் இழக்கும் அபாயம்
உள்ளது.
மலேரியா, சிக்குன் குன்யா இரண்டுமே கொசுக்களால்
பரவக்கூடியதுதான். இந்த நோய் வந்தவர்களுக்கு குறைந்தபட்சம் ஆறு மாத
காலத்துக்கு மூட்டு வலி இருக்கும். அதனால் தொடர்ச்சியான காய்ச்சல் தும்மல்
இருமல் அலர்ஜி இருந்தால் உடனே மருத்துவரை அணுகுவது அவசியம்.