நீடாமங்கலம்: திருவாரூர் அருகே திருமணத்துக்கு மறுத்த காதலியை கத்தியால் குத்திக் கொன்ற காதலன், தானும் குத்திக்கொண்டு தற்கொலைக்கு முயன்றார். ஆபத்தான நிலையில் உள்ள அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரை அடுத்த மரக்கடை சித்தாத்தாங்கரையை சேர்ந்தவர் அன்பழகன். இவரது மகள் வினோதினி (17), கூத்தாநல்லூர் அரசு பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். அதே பகுதியை சேர்ந்த பிரகாஷ் (22), பூண்டியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் 3ம் ஆண்டு படித்து வந்தார். ஒரே பகுதியை சேர்ந்தவர்கள் என்பதால் வினோதினியும் பிரகாஷும் நட்பாக பழகி வந்தனர். நாளடைவில் அது காதலாக மாறியது. இவர்களின் காதல் விவகாரம் வினோதினி வீட்டுக்கு தெரியவந்தது. காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த அவர்கள், வினோதினியை அவரது முறை பையனுக்கு திருமணம் செய்ய முடிவு செய்தனர். இதற்கிடையே, காலாண்டு தேர்வு விடுமுறை வந்ததும் மகளை முறைமாமன் வீட்டுக்கு அன்பழகன் அனுப்பி வைத்தார். அங்கு சென்ற வினோதினி, மனம் மாறினார். முறை மாமனை திருமணம் செய்துகொள்ள சம்மதம் தெரிவித்துள்ளார். விடுமுறை முடிந்து பள்ளிக்கு சென்ற வினோதினி, பிரகாஷிடம் பேசுவதை தவிர்த்து வந்தார். காரணம் கேட்டபோது, Ôஎனக்கு திருமணம் முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, என்னை மறந்து விடு’ என கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பிரகாஷ், வினோதினியை கொலை செய்ய திட்டமிட்டார். இந்நிலையில், நேற்றிரவு வினோதினியை சந்தித்த பிரகாஷ், தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால், அவர் மறுத்து விட்டார். திடீரென மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்த பிரகாஷ், வினோதினியின் கழுத்து, வயிறு உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக குத்தினார். பின்னர் தனது கழுத்திலும், வயிற்றிலும் குத்திக் கொண்டார். படுகாயமடைந்த வினோதினி அந்த இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பிணமானார். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த பிரகாஷை அந்த பகுதியினர் மீட்டு, தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து கூத்தாநல்லூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். காதலியை குத்திக் கொன்று, காதலன் தற்கொலைக்கு முயன்ற சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook