கணவர் - மாமியார் மீது சிரஞ்சீவி மகள் புகார்
ஐதராபாத்: ரூ.50 லட்சம் வரதட்சணை கேட்டு கணவரும் மாமியாரும் அடித்து கொடுமைப்படுத்துவதாக சிரஞ்சீவியின் மகள் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியின் மகள் சிரிஜா. இவர் தனது பெற்றோரை எதிர்த்து காதலன் சிரிஸ் பரத்வாஜை கடந்த 2007ம் ஆண்டு மணந்தார். ஒன்றாக வாழ்ந்துவந்த தம்பதிகளிடையே சமீபகாலமாக மனக்கசப்பு ஏற்பட்டது. இதையடுத்து கணவரைவிட்டு பிரிந்த சிரிஜா கடந்த 14ம் தேதி ஐதராபாத் போலீஸ் கமிஷனர் ஏ.கே.கானை சந்தித்து புகார் கொடுத்தார். அதில், ‘எனது கணவரும், மாமியாரும் என்னை வரதட்சணை கேட்டு அடித்து கொடுமைபடுத்துகின்றனர். எப்போது பணம் தேவையென்றாலும் என்னிடம் கேட்டு வாங்கிச் செல்வார் சிரிஸ். இது தொடர்கதையானதால் எனது பேரிலிருந்த சொத்துக்களை என் பெற்றோர் பெயருக்கு மாற்றி எழுதினேன். இதனால் கோபம் அடைந்த சிரிஸும், என் மாமியாரும் என்னை கொடுமைப்படுத்த தொடங்கினார்கள். எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டிருந்தேன்.
நான் எங்காவது சென்றால் என்னை ஆட்கள் மூலமாக கண்காணித்தார்கள். எனது உறவினர் அல்லு அர்ஜுன் திருமணம் சமீபத்தில் நடந்தது. அப்போது அடிக்கடி போன் செய்து நான் எங்கிருக்கிறேன் என்று கேட்டுக்கொண்டே இருந்தார்கள். இதையெல்லாம் கூட பொறுத்துக்கொண்டேன். ஒருவாரத்துக்கு முன்பு ரூ.50 லட்சம் பணம் கொண்டுவரும்படி கேட்டு தொல்லை கொடுத்தனர். இதனால் வேதனை அடைந்த நான் என் பெற்றோர் வீட்டுக்கு வந்துவிட்டேன். மீண்டும் கணவர் வீட்டுக்கு செல்லவில்லை. சிரிஸ் செய்யும் கொடுமைக்கெல்லாம் அவரது அம்மாவும் துணையாக இருக்கிறார். அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறி இருந்தார். இந்த புகாரின் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். சிரிஸ் தற்போது மத்திய திரைப்பட குழுவினர் பிராந்திய பிரிவு உறுப்பினராக இருக்கிறார்.