புதுடெல்லி: சண்டிகரில் கடைகள் ஒதுக்கீட்டில் மத்திய அமைச்சர் பன்சால் முறைகேடு செய்ததாக கூறி, நாடாளுமன்றத்தின் இருஅவைகளிலும் பா.ஜ உறுப்பினர்கள் அமளி செய்தனர். இதனால், இரு அவைகளும் ஒத்தி வைக்கப்பட்டன. மக்களவை நேற்று காலை கூடியதும் பா.ஜ. எம்.பி.க்கள் சண்டிகரில் கடைகள் ஒதுக்கீடு விவகாரத்தை எழுப்பினர். கடைகள் ஒதுக்கீட்டில் நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பவன் குமார் பன்சால் தலையிட்டதாகவும், அதில் முறைகேடு நடந்துள்ளதாகவும் பா.ஜ.வினர் குற்றம்சாட்டினர். இது பற்றி விவாதிக்க வேண்டுமென சித்து உள்ளிட்ட பா.ஜ. எம்.பி.க்கள் ஆவேசமாக கோரினர். அவர்களின் அமளியால் பகல் 12 மணி வரை மக்களவை ஒத்திவைக்கப்பட்டது. அவை மீண்டும் கூடியபோதும், பா.ஜ. எம்.பி.க்கள் கோஷமிட்டனர். கடைகள் ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடு பற்றி எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ் பேச அனுமதிக்குமாறு அவர்கள் கோரினர்.
அதே நேரத்தில் உ.பி.யில் சமாஜ்வாடி கட்சியினர் மீது மாயாவதி அரசு எடுத்து வரும் கெடுபிடி நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க சமாஜ்வாடி எம்.பி.க்கள் வலியுறுத்தினர். இதனால், ஒரு கட்டத்தில் பா.ஜ., சமாஜ்வாடி எம்.பி.க்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, அமைச்சர் பன்சால் குறுக்கிட்டு, ‘சில நடைபாதை வியாபாரிகளுக்கு 64 சதுரஅடி சிறிய கடைகளை ஒதுக்க சிபாரிசு செய்திருந்தேன். மற்றபடி எந்த முறைகேட்டிலும் ஈடுபடவில்லை. இது தொடர்பாக சுஷ்மா சண்டிகர் வந்து விசாரிக்கட்டும். இந்த விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணை நடத்தட்டும்Õ என்றார். இதற்கு பதிலளிக்க சுஷ்மா சுவராஜ் முயன்றார். ஆனால், சமாஜ்வாடி கட்சியினர் கோஷமிட்டபடி இருந்ததால் அவரால் பேசமுடியவில்லை. இதற்கிடையே பிற்பகல் 2 மணி வரை அவை ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. மாநிலங்களவையிலும் இந்த விவகாரத்தை பா.ஜ.வினர் எழுப்பினர். பிற்பகல் 2மணி வரை இரண்டு முறை அவை ஒத்திவைக்கப்பட்டது.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook