அரசு நிலம் விடுவிப்பு வழக்கில் எடியூரப்பாவுக்கு முன்ஜாமீன்
பெங்களூர்: அரசு நிலத்தை விதிமுறைகளுக்கு புறம்பாக தனியாருக்கு தாரை வார்த்ததாக கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா மீது மேலும் ஒரு வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கில் அவருக்கு பெங்களூர் ஐகோர்ட் நேற்று நிபந்தனை முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. சுரங்க முறைகேடு புகாரில் சிக்கி முதல்வர் பதவி இழந்த எடியூரப்பா மீது கடந்த ஆகஸ்ட் மாதம் 5 நில விடுவிப்பு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதில் ஒரு வழக்கில் அவர் 24 நாள் சிறைவாசம் அனுபவித்தார். இரண்டு வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டன. மற்ற வழக்குகளில் அவர் முன்ஜாமீன் பெற்றார். இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதம் அவர் மீது மேலும் ஒரு நில விடுவிப்பு புகார் சுமத்தப்பட்டது. பெங்களூரை சேர்ந்த சமூக ஆர்வலர் விஜய்குமார் இந்த வழக்கை லோக்அயுக்தா கோர்ட்டில் தொடர்ந்தார். கடந்த 2009ம் ஆண்டு பெங்களூர் வளர்ச்சி ஆணைய விதிமுறைகளுக்கு புறம்பாக இரண்டு மனைகளை அப்போது முதல்வராக இருந்த எடியூரப்பா அரசின் கட்டுப்பாட்டிலிருந்து விடுவித்து தனியாருக்கு தாரை வார்த்தார் என புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதுதொடர்பாக முதல்கட்ட விசாரணை நடத்த லோக்அயுக்தா போலீசுக்கு கோர்ட் உத்தரவிட்டது. அண்மையில் விசாரணை அறிக்கை லோக்அயுக்தா கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. எந்த நேரமும் கோர்ட் சம்மனும் அதை தொடர்ந்து கைது நடவடிக்கையும் இருக்கலாம் என தகவல் வெளியானது. இதை தொடர்ந்து எடியூரப்பா பெங்களூர் ஐகோர்ட்டில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்தார். இதை நீதிபதி வி.ஜகநாதன் விசாரித்து, எடியூரப்பாவுக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். ரூ.2 லட்சம் ரொக்க உத்தரவாதம் அளித்து ஜாமீன் பெற்றுக் கொள்ளலாம். மாநிலத்தை விட்டு வெளியேறக்கூடாது என நிபந்தனை விதித்தார்.