சென்னை: பொறியியல் கல்லூரி மாணவர்களின் மேற்படிப்புக்கு பாதகம் ஏற்படாத வகையில் ஜூன் 30ம் தேதிக்குள் இறுதியாண்டு தேர்வு முடிவு வெளியிடப்படும் என்று உயர்கல்வி துறை அமைச்சர் பழனியப்பன் தெரிவித்தார். சட்டசபை இன்று காலை கூடியதும், விஜயதரணி (காங்.), ‘அண்ணா பல்கலைக் கழகத்தில் தேர்வுகள் தாமதமாக நடத்தப்படுவதால் மேற்படிப்புக்கு செல்லவும், வேலைவாய்ப்புக்கு செல்லவும் தாமதம் ஏற்படுகிறது. எனவே பிஇ, பிடெக், எம்இ, எம்டெக் ஆகிய படிப்புகளின் இறுதி ஆண்டு தேர்வுகளை பிப்ரவரிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று ஒரு கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டு வந்தார். அதற்கு உயர்கல்வி துறை அமைச்சர் பழனியப்பன் அளித்த பதில்: அண்ணா பல்கலைக்கழகம், பழமையான, சிறப்பு வாய்ந்த பல்கலைக்கழகம். கடந்த அரசு, இந்த பல்கலைக்கழகத்தை 5 பல்கலைக்கழகங்களாக பிரித்தது. இதை மீண்டும் ஒருங்கிணைக்க தமிழக அரசு சட்ட திருத்தம் கொண்டு வந்துள்ளது. ஒருங்கிணைப்பு நடவடிக்கைக்காக கூடுதல் தலைமை செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன் தலைமையில் ஒருங்கிணைப்பு குழு உருவாக்கப்பட்டுள்ளது. விரைவில் குழுவின் அறிக்கை அரசுக்கு வரும்.
அண்ணா பல்கலைக்கழகத்தின் அங்கீகாரம் பெற்ற பொறியியல் கல்லூரிகளில் மாணவர்களுக்கு தேர்வை விரைவில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த மாணவர்களுக்கு 8,500 பாடங்கள் தேர்வு செய்யப்பட்டு 82 லட்சம் வினாத்தாள்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. 6 லட்சம் பேர் தேர்வு எழுதுகிறார்கள். மே 3ம் தேதி தேர்வு நடத்த திட்டமிடப்பட்டது. அதில் மாற்றம் செய்யப்பட்டு, மே 14ம் தேதி முதல் தேர்வு தொடங்கும். தேர்வுகள் தொடர்ச்சியாக நடைபெறும். பிஇ, பிடெக் தேர்வுகள்தான் சில நாட்கள் தள்ளி போயுள்ளன. எம்இ, எம்டெக் தேர்வில் மாற்றம் இல்லை. உள்நாட்டு, வெளி நாட்டு நிறுவனங்களில் வேலை வாய்ப்புக்காக சேர்பவர்களுக்கும், மேற்படிப்புக்கு செல்பவர்களுக்கும் பிரச்னை ஏற்படுத்தாத வகையில் ஜூன் 30ம் தேதிக்குள் இறுதியாண்டு தேர்வு முடிவுகள் வெளியிடப்படும். அடுத்த ஆண்டு ஏப்ரலுக்குள் தேர்வுகள் நடத்துவது குறித்து அரசு சிந்திக்கும். இவ்வாறு அமைச்சர் பழனியப்பன் கூறினார்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook