ரோதக்: அரியானாவில் தொண்டு நிறுவனம் நடத்தி வந்த குழந்தைகள் காப்பகத்தில் சிறுவர், சிறுமிகளை பல்வேறு கொடுமைகளுக்கு ஆளாக்கியது கண்டுபிடிக்கப்பட்டது. தொண்டு நிறுவனம் நடத்தி வந்த பெண், அவரது மருமகன் கைது செய்யப்பட்டனர். அரியானா மாநிலத்தின் ரோதக் நகரில் பாரத் விகாஸ்சங் என்ற தொண்டு நிறுவனம் சார்பில் பெண்கள் மற்றும் குழந்தைகள் காப்பகம் நடத்தி வந்தவர் ஜஸ்வந்தி தேவி. கடந்த 7ம் தேதி, இந்த காப்பகத்தில் இருந்து 3 சிறுமிகள் டெல்லிக்கு தப்பினர். காப்பகத்தில் உள்ள சிறுமிகள் செக்ஸ் உள்பட பல்வேறு கொடுமைகளுக்கு ஆளானது அவர்கள் மூலம் தெரிய வந்தது. சிறுமிகள் கொடுத்த புகாரின்பேரில், குழந்தை உரிமைகள் பாதுகாப்புக்கான தேசிய கமிஷன் உறுப்பினர்கள், ரோதக்கில் உள்ள காப்பகத்தில் திடீர் ரெய்டு நடத்தினர். அப்போது, நிர்வாகி ஜஸ்வந்தி மற்றும் அவரது மருமகன் ஜெய் பகவான் மீது பல சிறுமிகள் திடுக்கிடும் குற்றசாட்டுகளை கூறினர். ‘பலர் எங்களை செக்ஸ் சித்ரவதை செய்துள்ளனர். எந்த சிறுமியாவது மறுத்தால், அவளை நிர்வாணமாக்கி அடித்து உதைப்பார்கள். எங்களை தினக்கூலிகளாக பல்வேறு வேலைகளுக்கு அனுப்பி சம்பளத்தை ஜஸ்வந்தி வாங்கிக் கொள்வார். சோறு, தண்ணீர் இல்லாமல் அறையிலேயே அடைத்து வைத்திருந்தனர்’ என்று சிறுமிகள் கூறினர். இதையடுத்து காப்பகத்தில் இருந்த 94 சிறுவர், சிறுமிகள் மீட்கப்பட்டனர்.
குழந்தைகளை தவறாக பயன்படுத்தியதாக ஜஸ்வந்தி மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர். ஜெய் பகவானும் கைது செய்யப்பட்டார். தன் மீதான குற்றசாட்டுகள் அடிப்படையற்றவை என்பதை சட்டரீதியாக நிருபிப்பேன் என ஜஸ்வந்தி கூறினார். இவர், பெண்கள் மேம்பாட்டுக்கு சிறப்பாக உழைத்ததாக இந்தாண்டு அரியானா அரசின் விருது வாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook