சென்னை: தமிழக சட்டசபையில் இன்று கேள்வி நேரம் முடிந்தவுடன், விதி 110ன் கீழ் முதல்வர் ஜெயலலிதா வாசித்த அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம், கடந்த மார்ச் 30ம் தேதி மின் கட்டணத்தை மாற்றி அறிவித்தது. அதன்பின், ரூ.3,554 கோடியே 16 லட்சம் கட்டண சலுகையும், ரூ.740 கோடி மானியத்தையும் அறிவித்தேன். அதன்படி, விசைத்தறி நெசவாளர்கள் தற்போது 2 மாதங்களுக்கு பயன்படுத்தும் முதல் 500 யூனிட்களுக்கு கட்டணம் ஏதும் செலுத்த வேண்டியதில்லை. 501 1000 யூனிட் வரை யூனிட் ஒன்றுக்கு ரூ.5 என்று கட்டணம் நிர்ணயித்த போதிலும், யூனிட்டுக்கு ரூ.1 மானியம் அளிக்கப்பட்டது. அதன்படி, இப்போது யூனிட்டுக்கு ரூ.4 மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த கட்டணமும் அதிகமாக உள்ளது, இதை குறைக்க வேண்டும் என்று கோரி விசைத்தறி நெசவாளர்கள் வேலை நிறுத்தம் செய்து வருகின்றனர். இதையடுத்து அவர்களுக்கு கூடுதல் சலுகை வழங்க அரசு முடிவு செய்துள்ளது. அதன் விவரம்: * 2 மாதங்களுக்கு 0 500 யூனிட் வரை கட்டணம் இல்லை. இதனால், 69 ஆயிரத்து 476 நெசவாளர்கள் பயன்பெறுவார்கள். * 501 1000 யூனிட் வரை தற்போதுள்ள கட்டணம் ரூ.4ல் இருந்து ரூ.2 ஆக குறைக்கப்படுகிறது. இதனால் 24 ஆயிரத்து 171 நெசவாளர்கள் பயன் அடைவார்கள். * 1001 1500 யூனிட் வரை தற்போதுள்ள கட்டணம் யூனிட் ஒன்றுக்கு ரூ.4 பதில் ரூ.3 ஆக குறைக்கப்படுகிறது. இதனால் 9,297 நெசவாளர்கள் பயன் அடைவார்கள். * 1500 யூனிட்களுக்கு மேல் பயன்படுத்தும் 28 ஆயிரத்து 56 நெசவாளர்களுக்கு தற்போதுள்ள ரூ.1 மானியம் தொடரும். 0500 யூனிட் வரை கட்டணம் இல்லாமலும், 501 1500 யூனிட் வரை உள்ள சலுகையும் பெறுவார்கள். இதன்மூலம் ரூ.47 கோடியே 5 லட்சம் கூடுதல் மானியமாக தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு அரசு தரும். மேலும் நிலையான கட்டணமாக மாதம் ஒன்றுக்கு 1 கிலோ வாட்டுக்கு தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் நிர்ணயித்த ரூ.50 என்பது ரூ.30 ஆக குறைக்கப்படும். இதற்காக ரூ.12 கோடியே 64 லட்சம், வாரியத்துக்கு அரசு மானியமாக கொடுக்கும். இந்த சலுகைகள் மூலம் விசைத்தறி பயனீட்டாளர்களுக்கான மானிய தொகை ஆண்டுக்கு ரூ.153 கோடியே 15 லட்சத்தில் இருந்து ரூ.212 கோடியே 84 லட்சமாக அதிகரிக்கும். அதிகரிக்கப்பட்ட மானிய தொகையான ரூ.59 கோடியே 69 லட்சத்தை தமிழ்நாடு மின்வாரியத்துக்கு அரசு தரும். இவ்வாறு ஜெயலலிதா கூறினார்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook