ஸ்ரீபெரும்புதூர்: குன்றத்தூர் ஒன்றியம் மணிமங்கலம் ஊராட்சியில் இஸா ஏரி உள்ளது. பொதுப்பணிதுறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஏரியிலிருந்து 10 மதகுகள் மூலம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு மணிமங்கலம், கரசங்கால், வரதராஜபுரம், தர்காஸ், மண்ணிவாக்கம், சேத்துப்பட்டு பகுதிகளில் உள்ள 1600 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெற்று வருகிறது. மேலும் ஏரி நிரம்பியதும் உபரி நீர் வெளியேற 3 கலங்கல் உள்ளது. இதேபோல் ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி பகுதியில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள பெரிய ஏரி, 650 ஏக்கர் விவசாய நிலங்களுக்கு நீர் ஆதாரமாக உள்ளது. தற்போது நீர்வள மற்றும் நிலவள திட்டத்தின் கீழ் இந்த 2 ஏரிகளின் கரை, மதகு மற்றும் கலங்கல் சீரமைக்க தேர்வு செய்யப்பட்டுள்ளது. மணிமங்கலம் ஏரியை சீரமைக்க ரூ.1.12 கோடியும், ஸ்ரீபெரும்புதூர் ஏரியை சீரமைக்க ரூ1.01 கோடியும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான டெண்டர் விடப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஸ்ரீபெரும்புதூர் ஏரி கரையையொட்டியுள்ள சுமார் 180 குடும்பங்கள் ஆக்கிரமிப்பு செய்து குடிசை கட்டி கடந்த 10 ஆண்டுகளாக வசித்து வருகிறது. அவர்கள் மின் இணைப்பும் பெற்றுள்ளனர். இந்நிலையில் ஏரி ஆக்கிரமிப்பு செய்தவர்கள் தாங்களாகவே 21 நாட்களுக்குள் அகற்றி விட வேண்டும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கினர். இதற்கு ஆக்கிரமிப்பாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஒரு பகுதியில் சீரமைப்பு பணி தொடங்கியுள்ளது. மணிமங்கலம் ஏரி, ஆக்கிரமிப்பு செய்து முள்வேலி அமைத்து பிளாட் போட்டு சிலர் விற்பனை செய்து வருகின்றனர். இதனால் இங்கு பணியை தொடங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுப்பணித்துறை அதிகாரிகள், ஏரிகள் பாதுகாப்பு சட்டத்தை பயன்படுத்த தயங்குவது ஏன் என்று மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook