மாணவிகளின் காலில் சூடு: ஆசிரியை கைது
தாகா: வங்கதேச பள்ளியில் மாணவிகளுக்கு காலில் சூடு வைத்த ஆசிரியை கைது செய்யப்பட்டார். வங்கதேச தலைநகர் தாகாவின் நமாஸ்யாம்பூர் பகுதியில் மதரசா பள்ளி உள்ளது. இங்கு மாணவிகள் அரபிக் மற்றும் பெங்காலி படித்து வந்தனர். ஜெஸ்மின் அக்தர் என்பவர் ஆசிரியையாக இருந்தார். பள்ளி விடுமுறை முடிந்து கடந்த 1,ம் தேதி மீண்டும் திறக்கப்பட்டது. அன்றைய தினம் பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்த மாணவிகள் சிலரின் காலில் சூடு போடப்பட்டிருந்ததை பார்த்து பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். ஆசிரியை ஜெஸ்மின் சூடு வைத்ததாக மாணவிகள் கூறினர். விடுமுறை முடிந்து பள்ளிக்கு வந்த மாணவிகளிடம், ‘விடுமுறையில் ஒழுங்காக பிரார்த்தனை செய்தீர்களா? அப்படி செய்யாதவர்கள் கையை தூக்குங்கள்’ என்று ஆசிரியை கேட்டுள்ளார். அப்போது சில மாணவிகள் கையை தூக்கியுள்ளனர். அவர்களை பார்த்து கோபமான ஆசிரியை இரும்பு கம்பியை பழுக்க காய்ச்சி காலில் சூடு வைத்ததாக கூறப்படுகிறது. மொத்தம் 14 மாணவிகளுக்கு காலில் சூடு வைக்கப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் 8 முதல் 12 வயதுக்கு உட்பட்டவர்கள். இதைத் தொடர்ந்து மாணவிகளின் பெற்றோர், போலீசில் புகார் கொடுத்தனர்.
இதையடுத்து ஆசிரியை தலைமறைவாகி விட்டார். கடந்த ஒரு வாரமாக அவரை போலீசார் தேடி வந்தனர். நேற்று தாகாவில் உள்ள ஒரு வீட்டில் ஆசிரியை இருப்பதாக தகவல் கிடைத்ததை தொடர்ந்து அங்கு சென்ற போலீசார் அவரை கைது செய்தனர். இதுகுறித்து கைதான ஆசிரியையிடம் கேட்டபோது, அவர் எதுவும் கூறவில்லை. அவரிடம் தீவிர விசாரணை நடக்கிறது.