பொன்னேரி :சென்னை காட்டுப்பள்ளி கப்பல் கட்டும் தளம் முன்பு வேலை கேட்டு 15 கிராம மீனவர்கள், 2வது நாளாக போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை அடுத்த காட்டுப்பள்ளியில் எல் அண்டு டி கப்பல் கட்டும் தளம் மற்றும் துறைமுகத்தில் வேலை கேட்டு சுற்றுப்புற கிராமங்களான பழவேற்காடு லைட் ஹவுஸ் குப்பம், தாங்கல், பெரும்புலம் ஊராட்சிகள் அடங்கிய அரங்கம் குப்பம், கூனங்குப்பம், திருமலை நகர், செம்பாசி பள்ளி குப்பம், நடுகுப்பம் உட்பட 15 மீனவ கிராமங்களில் உள்ள மீனவர்கள் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஒப்பந்தப்படி வேலை வழங்க கோரி காட்டுப்பள்ளி சாலையில் நேற்று மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்ததும் டிஆர்ஓ விசாகன், பொன்னேரி ஆர்டிஓ கந்தசாமி, எஸ்பி ரூபேஸ் குமார் மீனா, தாசில்தார் அந்தோணி, துணை தாசில்தார் தமிழ்செல்வன், விஏஓக்கள் விநாயகம், மனோகரன் மற்றும் எல் அண்டு டி நிறுவன பொது மேலாளர் அனில்ராய், அலுவலர் ராஜன் ஆகியோர் வந்தனர். மீனவ கூட்டமைப்பு நிர்வாகிகளுடன் பேச்சு நடத்தினர். 15 நாட்களுக்குள் முதல் கட்டமாக 600 பேருக்கும், மற்றவர்களுக்கு 2வது கட்டமாக வேலை வழங்கப்படும் என்று நிறுவனத்தினர் உறுதி அளித்தனர். ஆனால் இதை கிராம மக்கள் ஏற்கவில்லை. வேலை உத்தரவு வழங்கும் வரை நுழைவாயில் முன் தொடர் போராட்டம் நடத்துவோம் என்று கூறி இரவு முழுவதும் போராட்டத்தை தொடர்ந்தனர். கப்பல் கட்டும் தளம் முன்பு பந்தல் போட்டு இரவில் அங்கேயே தங்கினர். 2வது நாளாக இன்றும் போராட்டத்தை துவங்கியுள்ளனர். அசம்பாவித சம்பவங்களை தடுக்க பொன்னேரி டிஎஸ்பி ஜெகதீஸ்வரன் தலைமையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook