அக்னி நட்சத்திரம் மே 4-ல் துவக்கம்
வேலூர்: அக்னி நட்சத்திரம் வரும் 4ம் தேதி தொடங்குகிறது. வெயில் மாவட்டமான வேலூரில் கடந்த பிப்ரவரி மாத இறுதியில் தொடங்கிய வெயில் 2 மாதமாக மக்களை வாட்டி எடுத்து வருகிறது. கடந்த 17ம் தேதி அதிகபட்சமாக 108.3 டிகிரி வெயில் சுட்டெரித்தது. தொடர்ந்து 12 நாட்களாக 100 டிகிரிக்கு மேல் வெயில் வாட்டி எடுத்தது. இந்நிலையில் கடந்த 25ம் தேதி தொடங்கி, மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. இதனால் வெயிலின் தாக்கம் சற்று குறைந்துள்ளது. கடந்த 6 நாட்களாக 100 டிகிரிக்கு குறைவாக வெயில் இருப்பதால் பொதுமக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். இதற்கிடையே கோடையின் உச்சமான அக்னி நட்சத்திரம் வருகிற 4ம் தேதி தொடங்கி, 28ம் தேதி வரை இருக்கும். இந்த காலத்தில் கத்திரி வெயில் வாட்டி எடுப்பது வழக்கம். கோடை மழை பெய்து அக்னியின் உஷ்ணத்தை குறைக்குமா? என்று மக்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.