மும்பை : இந்திய அணியுடனான கடைசி டெஸ்டில் வெஸ்ட் இண்டீஸ் அணி 2வது இன்னிங்சில் 134 ரன்களுக்கு சுருண்டது. ஓஜா 6, அஸ்வின் 4 விக்கெட் வீழ்த்தினர். இதன் மூலம் இந்திய அணிக்கு 243 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இன்று கடைசி நாள் ஆட்டம் என்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மும்பை வான்கடே மைதானத்தில் நடந்து வரும் கடைசி டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 590 ரன் குவித்தது. தொடர்ந்து முதல் இன்னிங்சை ஆடிய இந்திய அணி நேற்றைய 4வது நாள் ஆட்டத்தில் 482 ரன் குவித்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அஸ்வின் 103, சச்சின் 94, டிராவிட் 82, காம்பீர் 55, கோக்லி 52 ரன் எடுத்தனர். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ராம்பால், சாமுவேல்ஸ் தலா 3, சமி 2, எட்வர்ட்ஸ், பிஜூ தலா 1 விக்கெட் கைப்பற்றினர்.
108 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை ஆடிய வெஸ்ட் இண்டீஸ் நேற்றைய ஆட்டம் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 81 ரன் எடுத்தது. பரத் 3, எட்வர்ட்ஸ் 17 ரன்னில் அவுட் ஆனார்கள். இந்த 2 விக்கெட்டுகளையும் ஓஜா கைப்பற்றினார். பரத் வெயிட் 34, பிராவோ 7 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இன்று கடைசி நாள் ஆட்டம் நடந்தது. இருவரும் தொடர்ந்து ஆடினர். ஆரம்பம் முதலே ஓஜாவும், அஸ்வினும் பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி கொடுத்தனர். இதனால் விக்கெட்டுகள் மளமளவென சரிந்தன. பரத்வெயிட் 35, பிராவோ 48, சாமுவேல்ஸ் 0, பாஹ் 1, பொவல் 11, ராம்பால் 0, சமி 10 ரன்களில் வரிசையாக ஆட்டமிழந்தனர். கடைசி விக்கெட்டுக்கு களமிறங்கிய பிஷூ டக்அவுட்டில் வெளியேற வெஸ்ட் இண்டீஸ் அணி 134 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஓஜா 6 விக்கெட்டும் அஸ்வின் 4 விக்கெட்டும் வீழ்த்தினர். முதல் இன்னிங்சில் 108 ரன்கள் முன்னிலை பெற்றிருந்ததால் இந்திய அணிக்கு 243 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதையடுத்து 2வது இன்னிங்சை இந்திய அணி துவக்கியது.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook