பல்வேறு கிராமங்களில் இன்றளவும் பேயோட்டும் விழாக்கள் நடந்து வருகின்றன. சாட்டையால் அடிப்பது, உச்சி முடியை பிடுங்கி மரத்தில் கட்டுவது, சத்தியம் வாங்குவது உள்பட பல்வேறு ரகங்களில் இவை அரங்கேறுகின்றன. அதிர்ச்சியாலோ, அருளாலோ சிலர் தெளிவு பெறுகிறார்கள். பேயோட்டும் நிகழ்ச்சிகளில் பூசாரிதான் பிரதானமாய் இருப்பார். அவரை மையமிட்டே பூஜைகள் நடக்கும். பூஜைகளில் கேட்கும் சத்தங்களும் கூச்சல்களும் பார்ப்போரை நடுநடுங்க வைக்கும். இருந்தாலும் விழாவில் ஏராளமானோர் பங்கேற்க தவறுவதில்லை. நாமக்கல் - திருச்சி மாவட்டங்களின் எல்லையில் தாத்தையங்கார் பேட்டையை அடுத்துள்ளது வெள்ளாளப்பட்டி கிராமம். இங்கு அச்சப்பன் கோயிலில் நடக்கும் சாட்டையடி திருவிழா சுத்துவட்டாரத்தில் பிரசித்தம். விஜயதசமியன்று இந்த விழா நடத்தப்படுகிறது. விழாவின் முக்கிய அம்சமே பேயோட்டும் நிகழ்ச்சிதான். அச்சப்பன் சாமிக்கு சர்வ அலங்காரம் செய்து அருகில் இருக்கும் காட்டு மண்டபத்துக்கு கொண்டு வருகிறார்கள். அங்குதான் ஆவிகளை விரட்டியடிக்கும் சடங்கு நடக்கிறது. பேய் பிடித்த கன்னிப் பெண்கள், திருமணமான பெண்கள் அச்சப்பன் சாமி முன்பு வரிசையாக உட்கார வைக்கப்படுகிறார்கள். அவர்களை பூசாரி சாட்டையால் அடிக்கிறார். இதனால் தங்களை பிடித்து ஆட்டும் பேய் விலகி ஓடும் என்று பக்தர்கள் நம்புகிறார்கள். சாட்டையடியில் பங்கேற்க திருச்சி, சேலம், நாமக்கல், ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஏராளாமான பெண் பக்தர்கள் வருகிறார்கள். சில பெண்கள், சாட்டையால் ஒரு அடி வாங்கியும் வலி தெரியாமல் நின்று மீண்டும் மீண்டும் அடி வாங்குகிறார்கள். தங்களை விட்டு கெட்ட சக்திகள் நீங்கிவிட்டதாக நினைத்த பிறகே எழுந்து செல்கிறார்கள். ‘அச்சப்பன் கோயில்ல சாட்டையடி வாங்குனா, பிடிச்ச பேய், நொய்நொடியெல்லாம் ஓடிப்போகும்னு நம்புறோம். அதனால, வருசா வருசம் வந்து அடி வாங்குறோம்’ என்கிறார்கள் சாட்டையடி பூஜையில் பங்கேற்ற பெண்கள். இதுபோல, கிருஷ்ணகிரி அருகே கொல்லப்பள்ளி மாரியம்மன் கோயிலிலும் சாட்டையடி திருவிழா விமரிசையாக நடக்கிறது. ஏராளமான பெண்கள் பங்கேற்கிறார்கள். சேலம் மாவட்டம் தம்மம்பட்டி, ஆத்தூர் பகுதிகளில் பேயோட்டும் விழா வித்தியாசமான முறையில் நடக்கிறது. அங்கு பெண்களை முறத்தால் அடித்து பேயோட்டுகிறார்கள். காளி வேஷம் போட்டிருக்கும் பூசாரி கையில் முறம் வைத்திருக்கிறார். பேய் ஓட்டப்பட வேண்டிய பெண்கள் வரிசையாக உட்கார்ந்திருக்கிறார்கள். ஆக்ரோஷமாக கத்தியபடியே வரும் பூசாரி, அவர்களை முறத்தால் அடிக்கிறார். தலையை ஆட்டியும், நாக்கை நீட்டியும் பெண்கள் ஆவேசமாக கத்துகிறார்கள். பூசாரி முறத்தால் அடிக்க அடிக்க.. அவர்களது ஆட்டம் அடங்குகிறது. அவர்களை ஆட்டிப் படைத்துவந்த பேய் ஓடிப்போனதாக நம்புகிறார்கள் மக்கள்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook