சிட்னி: பழைய டயர்கள் இனி வீணாகாது. அதை மறுசுழற்சி செய்து ரப்பர், புதிய டயர்கள் தயாரிக்கலாம். ரோடு போட பயன்படுத்தலாம் என்கின்றனர் ஆஸ்திரேலிய ஆராய்ச்சியாளர்கள். இரண்டு, நான்கு சக்கர வாகனங்கள் அத்தியாவசிய தேவைகளாகிவிட்டன. வாகனங்கள், உதிரிபாக விற்பனைக்கு ஏற்ப கழிவுகளும் அதிகரிக்கின்றன. அந்த வகையில் உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் 100 கோடி டயர்கள் வீணாக குப்பையில் வீசப்படுகிறது என்கிறது ஒரு ஆய்வு.
பழைய டயரை குப்பையோடு குப்பையாக வீசுவதால் நிலத்தடி நீர், சுற்றுச்சூழல் மாசுபடுகிறது. இதை தவிர்ப்பது தொடர்பாக ஆஸ்திரேலியாவில் உள்ள டீகின் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. ஆய்வில் கண்டறியப்பட்டது தொடர்பாக ஆய்வுக்குழு தலைவர் கிறிஸ் ஸ்கோரிட்ஸ் கூறியதாவது: குப்பையாக வீசப்படும் டயர்களில் உள்ள ரசாயன கலப்புகள் நிலத்தடிநீரை பாதிக்கிறது. சுற்றுச்சூழலை மாசுபடுத்துகிறது. இவற்றை எரிப்பதால் வெளியாகும் ரசாயன புகை, வளிமண்டலத்தில் கலந்து காற்றை மாசுபடுத்துகிறது.
இந்த விஷப் புகையை சுவாசித்தால், ஆஸ்துமா உள்ளிட்ட சுவாச கோளாறுகள் உண்டாகிறது. இது மட்டுமின்றி மலேரியா, டெங்கு உள்ளிட்ட பல்வேறு நோய் தாக்குதல்களுக்கு காரணமான கொசுக்களில் பெரும்பாலானவை வீணான டயர்களில் தேங்கும் நீரிலேயே உற்பத்தி ஆகின்றன. ரசாயன பொருட்கள் பயன்படுத்தாமல், குறைந்த அளவு மின்சாரத்தை கொண்டு டயர்களை மறுசுழற்சி செய்யும் முறையை கண்டறிந்துள்ளோம்.
இதை பயன்படுத்தி புதிய டயர்கள், ரப்பர், கார் பாகங்கள், கன்வேயர் பெல்ட்கள் தயாரிக்கலாம். ரோடு போடுவதற்கு தார் உள்ளிட்ட பொருட்களை கலப்பதற்கு ‘அஸ்ஃபால்ட்’ என்ற பொருள் தற்போது பயன்படுத்தப்படுகிறது. இது பெட்ரோலிய சுத்திகரிப்பின்போது கிடைக்கும் பொருளாகும். இதற்கு பதிலாகவும் டயரை மறுசுழற்சி செய்து பயன்படுத்தலாம். இது சுற்றுச்சூழல் பாதுகாப்பில் கணிசமான மாற்றத்தை ஏற்படுத்தும். இவ்வாறு ஸ்கோரிட்ஸ் தெரிவித்தார்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook