ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையுடன் மலையப்ப சுவாமி உலா!
திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவ 5ம் நாளான இன்று காலை மோகினி அலங்காரத்தில் மலையப்பர் பவனி வந்தார். இன்றிரவு கருடசேவை நடைபெறுகிறது. திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரம்மோற்சவத்தையொட்டி நேற்று இரவு சர்வ பூபால வாகனத்தில் ஸ்ரீதேவி, பூதேவியருடன் மலையப்ப சுவாமி பவனி வந்தார். அப்போது பெய்த மழையை பொருட்படுத்தாமல் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
மோகினி அவதாரத்தில் ஏழுமலையானை அலங்கரிப்பதற்காக ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை, சேலை ஆகியவை நேற்று திருமலைக்கு ஊர்வலமாக கொண்டுவரப்பட்டது. அவற்றை மூலவருக்கு இன்று அதிகாலை அணிவித்தனர். பின்னர் மோகினி அவதாரத்தில் உள்ள மலையப்பருக்கு அணிவிக்கப்பட்டு வீதி உலா நடந்தது. பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வான கருடசேவை இன்றிரவு நடைபெறுகிறது. இதையொட்டி பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.
இதற்கிடையே நேற்று மாலை 6 மணியில் இருந்து பக்தர்களுக்கு கூடுதலாக (100 ரூபாய்க்கு 4 லட்டுகள்) வழங்கப்படும் லட்டு பிரசாதத்தில் திடீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால் பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர். இதனை தவிர்க்க இன்று முதல் 1 லட்சம் லட்டுகள் கூடுதலாக தயாரிக்கப்பட்டு வினியோகிக்கப்படுகிறது.
பிரம்மோற்சவத்தின் 3ம் நாளான நேற்று முன்தினம் 1 லட்சத்து 27 ஆயிரத்து 179 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் 1 கோடியே 87 லட்சத்து 90 ஆயிரம் ரூபாயை உண்டியலில் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். பிரசாத விற்பனையில் ரூ.39 லட்சத்து 55 ஆயிரத்து 753 வசூலானது.