திமுக ஆட்சி அமைந்தவுடன் 100 நாளில் 1 கோடி மனு மீது தீர்வு: மு.க.ஸ்டாலின் அதிரடி வாக்குறுதி
1/25/2021 4:55:02 PM
* 29ம் தேதி முதல் 234 தொகுதிகளில் பிரசாரம்
சென்னை: திமுக ஆட்சி அமைந்ததும் 100 நாளில் ஒரு கோடி குடும்பங்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காணப்படும். இதற்காக தனி துறை உருவாக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அதிரடி அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளார். வருகிற 29ம் தேதி திருவண்ணாமலையில் பிரசாரத்தை தொடங்கி 30 நாளில் 234 தொகுதிகளிலும் நடத்தப்படும் என்று மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று காலை கோபாலபுரத்தில் உள்ள இல்லத்தில் நிருபர்களிடம் கூறியதாவது: வரும் சட்டமன்ற தேர்தலையொட்டி பிரசார வியூகத்தை பல முனைகளில் திமுக சார்பில் நடத்தி கொண்டிருக்கிறோம். அந்த அடிப்படையில் வரும் 29ம்தேதியில் இருந்து ஒரு புதிய கோணத்தில் ஒரு பிரசார வியூகத்தை நடத்த திட்டமிட்டிருக்கிறோம். கடந்த 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் தமிழகம் எல்லா துறைகளிலும், எல்லா வகையிலும் அதல பாதாளத்துக்கு போய்விட்டது.
அதிமுக ஆட்சியின் சாதனைகளை சொல்ல வேண்டும் என்றால், தமிழகத்தின் கடன் சுமை ரூ.5லட்சம் கோடி. எல்லா துறையிலும் பல்லாயிரம் கோடி கொள்ளை. தமிழக உரிமைகளை மத்திய அரசிடம் அடகு வைத்திருப்பது, பெரிய முதலீடுகளை ஈர்க்க முடியாத மாநிலமாக தமிழகத்தை மாற்றியது. வேலை வாய்ப்பை உருவாக்காமல் பல லட்சம் இளைஞர்களின் வாழ்க்கையை கேள்வி குறியாக ஆக்கி வைத்திருப்பது, விஷம் போல விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு சீரழிவு, விவசாயிகளை தொடர்ந்து வஞ்சித்துக் கொண்டிருப்பது, சமூக நீதியை உருக்குலைத்தது. இப்படி நம்பி வாக்களித்த மக்களுக்கு பல்வேறு வகைகளில் துரோகம் செய்து கொண்டிருக்கக்கூடிய அரசு தான் பழனிச்சாமி தலைமையில் இருக்கக்கூடிய அதிமுக அரசு. எல்லா தரப்பு மக்களும் நிம்மதியாக இல்லை. ஏற்கனவே இருந்த வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படவில்லை.
அதை விட என்ன சொல்ல வேண்டும் என்றால், இருந்த நிம்மதியும் இழந்து தவித்து கொண்டிருக்கின்றனர் தமிழக மக்கள். விவசாயிகள் முதல் அரசு ஊழியர்கள் வரை, தொழிலாளர்கள் முதல் தொழில் அதிபர்கள் வரை, கிராமப்புற மக்கள் முதல் நகர்ப்புற மக்கள் வரை, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லாருடைய நிம்மதியும் நிற்கதியாக போய்விட்டது. எந்த தொகுதியிலும் புதிய திட்டங்கள் கிடையாது. அது முதல் முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் தொகுதியாக இருந்தாலும் சரி எங்கேயும் எதுவும் நடக்கவில்லை. மக்களின் அடிப்படை பிரச்னைகளை செய்து தர முடியாத நிலையில் இந்த ஆட்சி உள்ளது. அதிலும் குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்று சொன்னால், கொரோனா காலத்தில் மக்களை இந்த அரசு முழுவதுமாக கைவிட்டு விட்டது. மக்களுக்கு தேவைப்படும் போது கொடுக்காமல் தனக்கு தேவைப்படும் நேரத்தில், அதாவது தேர்தல் வந்து விட்டது பாருங்கள்.
இதை மனதில் வைத்துக் கொண்டு இப்போது ரூ.2500 கொடுத்துக் கொண்டிருக்கின்றனர். கொரோனா காலத்தில் மக்களை அரசு கைவிட்டு விட்டது. திமுக ஆட்சியில் இல்லாத இந்த சூழ்நிலையிலும் திமுக மக்களை கைவிடவில்லை. அதற்கு உதாரணம் தான். ‘ஒன்றினைவோம் வா’ என்ற அற்புதமான திட்டம். அதை தொடரந்து, ‘விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்’ என்ற பிரச்சாரத்தை நமது திமுக முன்னணியினர் ஏறக்குறைய 20 பேர் இன்னும் தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கின்றனர். அதை தொடர்ந்து நமது பொதுச் செயலாளர் அறிவித்த, ‘மக்கள் கிராம சபை கூட்டம்’ அது இன்று கிராமத்தில் இருந்து நகரம் வரை தொடர்ந்து நடத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. 10.600 கூட்டங்கள் தான் நடத்த திட்டமிட்டிருந்தோம். ஆனால் அதை தாண்டி 21000 வார்டுகள் மூலம் சுமார் ஒன்னே கால் கோடி மக்கள் அதிமுகவை நிராகரிக்கிறோம் என்று உறுதி எடுத்துக் கொண்டு தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளனர்.
இது எதை காட்டுகிறது என்றால் அதிமுக மீதுள்ள கோபத்தை திமுக ஆட்சிக்கு வர வேண்டும் என்ற ஆர்வத்தை வெளிப்படையாக பார்த்துக் கொண்டிருக்கிறோம். அடுத்த கட்டமாக திமுக பொறுத்தவரை தேர்தல் நேரத்தில் வழக்கமாக தேர்தல் அறிக்கையை வழங்குவோம். அதில் தொலை் நோக்கு திட்டங்களை அறிவிப்போம். அதை தான் திமுக செய்து கொண்டிருப்பது வழக்கம். ஆனால் இந்த முறை அதை விட முக்கியமாக ஒன்று தமிழக மக்களுக்கு தேவைப்படுகிறது. அதை ஊடகம் மூலமாக தெரிவிக்கிறேன். ‘‘மு.க.ஸ்டாலின் ஆகிய நான் தமிழ்நாட்டு மக்களாகிய உங்கள் முன்னிலையில் ஒரு உறுதியை அளிக்கிறேன். உங்கள் பிரச்னையை தீர்ப்பதே எனது முதல் பணி. எனது அரசின் முதல் 100 நாட்கள் போர்க்கால அடிப்படையில் உங்கள் பிரச்னைகளை தீர்வு காண அர்ப்பணிக்கப்படும். இதற்கு நான் பொறுப்பு. இதுவே நான் தமிழக மக்களுக்கு அளிக்கக்கூடிய உறுதிமொழி’’.
நாட்டு மக்களின் கோரிக்கை மனுக்களை பெறுவதற்கான மக்களை நோக்கி எனது பயணம் வரும் 29ம்தேதி தொடங்க உள்ளேன். ‘‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’’ என்பதே இந்த பயணத்துக்கு சூட்டப்பட்டுள்ள பெயர். இதை நான் முதலில் திருவண்ணாமலையில் தொடங்குகிறேன். அடுத்த 30 நாட்களில் தமிழகத்தின் 234 தொகுதிகளையும் உள்ளடக்கிய கலந்துரையாடல் கூட்டத்தில் பங்கேற்க இருக்கிறேன். நான் பங்கேற்க உள்ள கூட்டங்களில் அந்த தொகுதியை சார்ந்த கிராமம் அல்லது வார்டை சர்ந்தவர்கள் கலந்து கொண்டு என்னிடம் கோரிக்கை மனுக்களை தரலாம். அந்த இடங்களில் ஒவ்வொரின் குறைகள் அடங்கிய முழு தகவல்களையும் குறிப்பிட்ட எண் கொண்ட தனித் தனி படிவம் கொடுக்கப்படும்.
தனி தனி பதிவு எண் கொண்ட இந்த படிவத்தில் எழுதப்பட்டு அதற்கான ஒப்புதல் சீட்டு வழங்கப்படும். இதில் சீரியல் நம்பர் இருக்கிறது. நானே அனைத்து மனுக்களை சேகரித்து மக்கள் முன்பு பாதுகாப்பாக இருப்பதற்கு நானே அதற்கு சீல் வைக்க போகிறேன். இந்த கூட்டங்களில் நேரில் கலந்து கொள்ள முடியாதவர்களுக்கும் சில வசதிகளை செய்து தந்துள்ளோம். ஸ்டாலின் அணி செயலி மூலம் இதற்கென உருவாக்கப்பட்டுள்ளது. அல்லது இன்னொரு வசதி அதாவது, 9171091710 என்ற செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டே பிரச்னைகளை பதிவு செய்யலாம். திமுக ஆட்சி அமைந்ததும் 100 நாட்களில் மக்களின் அனைத்து கோரிக்கை மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இதை எப்படி செய்ய முடியும் எனற கேள்வி நிச்சயமாக உங்களுக்கு வரலாம்.
அதற்காக தான் முத்தமிழறிஞர் கலைஞர் வீட்டை இன்று நான் தேர்வு செய்தேன். அவர் சொன்னதை செய்வார், செய்வதை சொல்வார். சொன்னதை செய்வோம், செய்வதை தான் சொல்வோம் என்ற அவர் வழியில் நானும் சொன்னதை செய்து செய்வதை தான் சொல்வேன். தமிமிழகம் முழுவதும் வாங்கியிருக்ககூடிய மனுக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற எனது நேரடிக் கட்டுப்பாட்டில் தமிழக அரசின் சார்பில் ஒரு தனித் துறை ஒன்று உருவாக்கப்படும். அந்த துறை மாவட்ட ரீதியாக மனுக்களை பிரித்து பரிசீலித்து உடனடியாக நிறைவேற்றி தரககூடிய வாக்குறிதிகளை நான் தமிழக மக்களுக்கு வழங்குகிறேன். கிராம வாரியாக முகாம்கள் நடத்தப்பட்டு இந்த பிரச்னைகள் குறித்து விவாதிக்கபப்ட்டு நிறைவேற்றி தருவோம். கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக அரசு செய்ய தவறிய அந்த பிரச்னைகளை எல்லாம் திமுக அரசு பொறுப்பேற்ற பின்பு செய்து தரும்.
இந்த கடமையை திமுக அரசு நிறைவேற்றி தரும் போது தமிழகத்தில் சுமார் ஒரு கோடி குடும்பங்களின் கோரிக்கையாவது நிறைவேற்றப்பட்டிருக்கும். ஒரு கோடி குடும்பங்கள் தங்களுக்கு ஏற்பட்டுள்ள கவலைகள், துன்பங்கள் துயரங்களில் இருந்து மீண்டிருப்பார்கள் என்று நான் உறுதியாக சொல்கிகிறேன். அண்ணா, கலைஞர், தமிழக மக்கள் மீது ஆணையாக சொல்கிறேன் என உறுதி அளிக்ிகறேன். உங்கள் குறைகளை சொல்லுங்கள் நான் நிறைவேற்றி வைக்கிறேன். இந்த மனுக்களுக்கு நான் பொறுப்பு. நான் மட்டுமே பொறுப்பு. சொன்னதை செய்வான் இந்த ஸ்டாலின், செய்வதை தான் சொல்வான் இந்த ஸ்டாலின். இவ்வாறு அவர் கூறினார்.