நிதி நிறுவனம் ரூ11 கோடி மோசடி காவல்நிலையத்தை மக்கள் முற்றுகை: பட்டுக்கோட்டையில் பரபரப்பு
7/17/2019 5:01:21 PM
பட்டுக்கோட்டை: நிதி நிறுவனத்தில் பணம் கட்டி பாதிக்கப்பட்ட மக்கள், காவல்நிலையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவியது. மதுரையை தலைமையிடமாக கொண்ட ஒரு தனியார் நிதி நிறுவனம் தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் கடந்த 2011ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இங்கு வெண்டாக்கோட்டையை சேர்ந்த தனலட்சுமி (65) முகவராக பணியாற்றி வருகிறார். இவர் மூலம் பட்டுக்கோட்டை, மதுக்கூர் தாலுகாக்களில் சுமார் 4 ஆயிரம் பேர் மாத சீட்டு கட்டினர். இதில் பணம் செலுத்தியவர்களில் பெரும்பாலானவர்கள் தவணை காலம் முடிந்து பணம் திருப்பி கொடுக்கப்படவில்லை என்று தெரிகிறது. இவ்வாறு பணத்தை கொடுக்காமல் பல மாதங்களாக இழுத்தடித்து வந்ததால் பாதிக்கப்பட்டவர்கள் பட்டுக்கோட்டை போலீசில் புகார் செய்தனர். ஆனால், போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிகிறது.
இந்தநிலையில், நேற்று மாலை பணம் கட்டி பாதிப்படைந்தவர்களில் சுமார் 300க்கும் மேற்பட்ட பெண்கள் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட்ட செயலாளர் தமிழ்ச்செல்வி தலைமையில் பட்டுக்கோட்டை நகர காவல் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது அவர்கள், ‘’ நிதி நிறுவனத்திடம் பணத்தை திரும்ப வாங்கி தரும்படி’’ கேட்டனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் போலீசார் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து கலைந்து சென்றனர். இதுபற்றி போலீசார் நடத்திய விசாரணையில், பட்டுக்கோட்டை நிதி நிறுவனம் 11 கோடிக்கு மேல் மோசடி செய்திருக்கலாம் என்று தெரிகிறது.