தூத்துக்குடி அனல் மின்நிலையத்தில் மீண்டும் தீ
தூத்துக்குடி: தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் இன்று அதிகாலை மீண்டும் தீ விபத்து ஏற்பட்டது. இதில் ரூ.25 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம் ஆனது. தூத்துக்குடி தெர்மல் நகரில் உள்ள அனல் மின் நிலையத்தில் தலா 210 மெகாவாட் வீதம் 5 யூனிட்டுகளில் மொத்தம் 1050 மெகாவாட் மின் உற்பத்தி நடந்து வருகிறது. இங்கு மின் உற்பத்திக்காக கப்பல்கள் மூலம் நிலக்கரி கொண்டு வரப்படுகிறது. இந்த நிலக்கரியை துறைமுகத்தில் உள்ள கரிதளத்தில் இருந்து நேரடியாக அனல் மின்நிலையத்திற்கு கொண்டு செல்வதற்காக இரண்டு கன்வேயர் பெல்ட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.
இவற்றின் மூலம் நிலக்கரி, அனல் மின் நிலையத்தில் உள்ள பிரைமரி கிரஷர் ஹவுஸ் மற்றும் செகண்டரி கிரஷர் ஹவுஸ் பகுதிகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது. இங்கு நிலக்கரி உடைக்கப்பட்டு மின் உற்பத்திக்கு பயன்படுத்தும் விதமாக மாற்றப்படுகிறது. இந்நிலையில் இங்கு கடந்த 3ம்தேதி அதிகாலையில் யூனிட்டில் உள்ள 47, 48வது பெல்ட்டுகளில் திடீர் உராய்வு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. இதில் நிலக்கரி, கன்வேயர் பெல்ட் மற்றும் மின் மோட்டார்கள் உள்ளிட்ட சுமார் ரூ. 12 கோடி மதிப்பு பொருட்கள் எரிந்து நாசம் ஆனது.
இந்நிலையில் இன்று அதிகாலை இங்கு மீண்டும் தீ விபத்து ஏற்பட்டது. துறைமுகத்தில் இருந்து நிலக்கரி கொண்டு செல்லும் பிரைமரி மற்றும் செகண்டரி கன்வேயர் பெல்ட் யூனிட்டுகளுக்கு இணைப்பாகவும், ஒன்றில் இருந்து மற்றொன்றுக்கு நிலக்கரியை மாற்றுவதற்கும் பயன்படும் கன்வேயர் பெல்ட்டில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டு தீப்பற்றி எரிந்தது.
தகவலறிந்த தெர்மல்நகர் தீயணைப்பு படையினர் விரைந்து சென்று சுமார் ஒருமணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதில் நிலக்கரி மற்றும் கன்வேயர் பெல்ட்டுகள் மற்றும் மின்மோட்டார்கள் உள்ளிட்ட மின்சாதனங்கள் எரிந்து நாசமானது. இதன் சேத மதிப்பு ரூ.25 லட்சம் ஆகும். ஆனாலும் மின் உற்பத்தி பாதிக்கப்படாது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.