ரயில் பயணியிடம் ரூ1.75 லட்சம் அபேஸ் வாலிபர் பிடிபட்டார்
கோவை :கோவை பீளமேடு சித்ரா நகரை சேர்ந்தவர் வாசன். ரியல் எஸ்டேட் உரிமையாளர். காங்கிரஸ் கட்சி நிர்வாகியான இவரது மருமகன் நிர்மல்குமார்(39). எத்தியோப்பியா நாட்டில் பணிபுரிகிறார். குடும்ப விழாவில் பங்கேற்க இவர் நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்னையில் இருந்து கோவைக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் வந்தார். கோவை ரயில் நிலையத்தில் 2 டிராலியில் பொருட்களை வைத்து இழுத்து வந்தனர். ஒரு டிராலியில் இருந்த லெதர் பேக்கை காணவில்லை. அதில், ரூ.1.75 லட்சம் இருந்தது. நிர்மல்குமார் ரயில்வே போலீசில் புகார்செய்தார். நேற்று முன்தினம் மாலை கோவை ரயில்நிலையத்தில் பொருட்கள் காப்பக அறைக்குள் சந்தேகப்படும்படியாக சென்றுகொண்டிருந்த ஒரு நபரை பிடித்து விசாரித்தனர். அவர் வேலூரை சேர்ந்த நிஷாந்த் என்ற அண்ணாமலை(22). ரயில்நிலையங்களில் நகை, பணம் மற்றும் பொருட்களை திருடுவதில் கைதேர்ந்தவர். ரூ.1.75 லட்சத்தை திருடியதை ஒப்புக்கொண்டார். உடனே வெளியே கொண்டுசென்றால் போலீசார் பிடித்துவிடுவார்கள் என்பதால் பொருட்கள் காப்பக அறையில் வைத்துவிட்டு, ஊட்டி சென்றுள்ளார். மாலையில் வந்து எடுத்துச்செல்ல முயலும்போது போலீஸ் பிடியில் சிக்கிக்கொண்டார். அவரை கைது செய்த போலீசார், கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.