மாநிலம் முழுவதும் உள்ள யானை வழித்தடங்கள் ஆய்வு
மேட்டுப்பாளையம் :மாநிலம் முழுவதும் உள்ள யானைகளின் வழித்தடங்களை ஆய்வு செய்ய கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வழித்தடங்களை அரசு வாங்கும் என்று அமைச்சர் பச்சைமால் கூறினார். கோவை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள வனப்பகுதிகளில் இருந்து யானைகள் உணவுக்காகவும், குடிநீருக்காகவும் குடியிருப்பு மற்றும் விளைநிலங்களுக்குள் புகுந்து விடுகின்றன. வாழை, கரும்பு உள்ளிட்ட பயிர்களை தின்றும், நாசப்படுத்தியும் சென்று விடுகின்றன. யானை,மனித மோதல்களை தடுக்கும் வகையில் யானைகளுக்காக தீவனக்காட்டை அமைக்கும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். சிறுமுகை, காரமடை பகுதியில் யானைகள் விரும்பி உண்ணும் ஆலமரம், அத்தி மரம், மா, பலா மரச்செடிகள் வளர்க்கப்பட்டுள்ளன. இதற்கான பணிகளை நேற்று பார்வையிட்ட வனத்துறை அமைச்சர் பச்சைமால் கூறுகையில், ‘‘தீவனக்காடுகள் உருவாக்கினால், விளைநிலங்களில் யானைகள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த முடியும். மலைப்பகுதியில் தண்ணீரை தேக்கி வைக்க ரூ.250 கோடியில் நபார்டு வங்கி கடனுதவியுடன் தடுப்பணைகள் கட்டும் பணிகள் நடந்து வருகிறது. தமிழகத்தில் பாதிக்கப்பட்டுள்ள யானை வழித்தடங்களை கண்டறிந்து ஆய்வு மேற்கொள்ள கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் ஆய்வுபணியை மேற்கொண்டு வருகிறார்கள். அவர்களது வழிகாட்டுதல்படி விவசாயிகள், பொதுமக்களிடம் கலந்து ஆலோசித்து அந்த வழித்தடங்களை அரசு வாங்கும் என்றார்.